நேற்று மிரட்டல்.. இன்று இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்! வைத்த திடீர் கோரிக்கை.. என்ன மேட்டர்?
இஸ்லாமாபாத்: ஒரு பக்கம் பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து இந்தியாவை மிரட்டும் வகையில் பேசி வருகிறார்கள். நேற்று கூட அந்நாட்டின் ராணுவத் தளபதி முனீர் இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால், இன்று பாகிஸ்தான் தனது டோனை மாற்றிவிட்டது. இந்தியாவுக்குக் கோரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு கருத்து சொல்லியுள்ளது. இதற்கான பின்னணியை நாம் பார்க்கலாம்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் நேற்று அமெரிக்காவில் இருந்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையானது. இந்தியா சிந்து நதி நீரில் அணையைக் கட்டினால் அதை ஏவுகணையைக் கொண்டு அழிப்போம் என்று முனீர் பேசியிருந்தார். மேலும், அணு ஆயுதங்கள் தொடர்பாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசியிருந்தார்.

யூடர்ன் போட்ட பாகிஸ்தான்
இதற்கிடையே ஒரு நாளில் பாகிஸ்தான் யூடர்ன் போட்டுவிட்டது என்றே சொல்லலாம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருக்கும் சூழலில் அதை மீண்டும் செயல்படுத்துமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் விளக்கத்தை வரவேற்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் மேற்கு நதிகளான செனாப், ஜீலம் மற்றும் சிந்து ஆகியவை பாகிஸ்தானுக்குப் போகும். ஆனால், இப்போது சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்திருப்பதால் அங்குப் புனல் மின் திட்டங்களை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவகாரத்திலேயே நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு சற்று சாதகமாக ஆகஸ்ட் 8ம் தேதி கருத்து சொன்னது. அதைத் தான் பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.
தண்ணீர் கொடுங்க
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை உடனடியாக மீண்டும் செயல்படுத்துமாறும், அதன் ஒப்பந்தக் கடமைகளை முழுமையாகவும், நேர்மையாகவும் நிறைவேற்றுமாறும் இந்தியாவை வலியுறுத்துகிறோம். மேற்கு நதிகளின் நீரை பாகிஸ்தான் தடையின்றிப் பயன்படுத்த இந்தியா அனுமதிக்க வேண்டும். மேலும், நீர்மின் உற்பத்திக்குத் தேவையான விதிவிலக்குகள் ஒப்பந்தத்திற்கு ஏற்ப இணங்க வேண்டும். இந்தியாவுக்குச் சாதகமாக மட்டும் இருக்கக் கூடாது" என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா நிலைப்பாடு
உண்மையில் நடுவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 1960ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பான வழக்கில் கூறப்பட்ட கருத்துக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் மிரட்டலும் பதுங்கலும்!
மறுபுறம் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தே வந்துள்ளது. முனீர் மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசியல்வாதி பிலாவல் பூட்டோ கூட இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இந்தியாவின் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு மிக பெரிய ரிய சேதத்தை ஏற்படுத்தியதாகவும், நரேந்திர மோடிக்கு எதிராக அனைத்துப் பாகிஸ்தானியர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இப்படி நேற்று வரை இந்தியாவுக்கு மிரட்டல் கொடுத்து வந்த பாகிஸ்தான் இன்று டோனை மாற்றி இருக்கிறது. அதற்குப் பிரதானக் காரணமே சிந்து நதி நீர் தான். பாகிஸ்தானின் பஞ்சாப் உட்படப் பல மாகாணங்களுக்குச் சிந்து நதி நீர் முக்கிய தேவையாக இருக்கிறது. திடீரென இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ள நிலையில், வரும் காலத்தில் அதை நிறுத்தினால் பாகிஸ்தானின் விவசாயம் மிகப் பெரிய ஆபத்தில் தள்ளப்படலாம்.












Click it and Unblock the Notifications