திடீரென மாயமான வடகொரிய அதிபர் கிம் ஜாங்! இது ஒன்னும் புதுசு இல்லை தான்.. ஆனாலும் இதை நோட் பண்ணீங்களா
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் திடீரென மாயமாகியுள்ளார்.
பியோங்யாங்: வடகொரியாவில் இந்த வாரம் கொரிய மக்கள் ராணுவத்தின் 75வது ஆண்டு விழா அணிவகுப்புகள் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இன்னுமே கூட சர்வாதிகாரம் தொடரும் ஓரிரு நாடுகளில் ஒன்று வடகொரியா.. அங்கு கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது.
ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் இடையே எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுடன் மட்டுமே வணிக உறவை வடகொரியா கொண்டுள்ளது.

வடகொரியா
வெளியுலகத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதால் அங்கு மக்கள் என்ன நிலையில் உள்ளனர் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இருப்பினும், ராணுவத்திற்குப் பல ஆயிரம் கோடி வரை செலவிடும் அதே நேரத்தில் வடகொரியாவில் மக்கள் மோசமான ஏழ்மை நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு மக்கள் யாருக்கும் இணையச் சேவை இல்லை. மேலும், பல மணி நேரம் வரை மின் தடையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாயம்
இருப்பினும், இதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் தொடர்ந்து ராணுவத்திற்குப் பல கோடியை ஒதுக்கி வருகிறார்.. இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்ந்து மோசமாவதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. அவரது உடல் எடையும் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், உடல்நிலை மோசமடைவதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் இப்போது அவர் திடீரென மாயமாகியுள்ளார்.

முக்கிய அணிவகுப்பு
கிம் ஜாங் இப்படி திடீர் திடீரென மாயமாவது வழக்கமான ஒன்று தான் என்றாலும் கூட இந்த வாரம் வடகொரியாவில் அங்கு மிகப் பெரிய அணிவகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர் மாயமாகியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. வட கொரியத் தலைநகரான பியாங் யாங் இந்த அணிவகுப்புகளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த ஒரு மாதமாகவே கிம் ஜாங் உன் பொதுவெளியில் காணப்படவில்லை.. எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

மீட்டிங்கிலும் இல்லை
அங்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை முக்கியமான பொலிபுடோ மீட்டிங்கில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. மூன்றாவது முறையாக இந்த பொலிபுடோ மீட்டிங்கை அவர் தவிர்த்துள்ளதாகத் தென் கொரியாவில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முக்கிய மீட்டிங்களை தவிர்த்து இப்படி அவர் இத்தனை காலத்திற்குப் பொதுவெளிக்கு வராமல் இருப்பது அவரது உடல்நிலை குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டு விழா
கொரிய மக்கள் ராணுவத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்த வாரம் வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கில் மிகப் பெரிய அணிவகுப்புகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்தின் இந்த அணிவகுப்பில் தான் வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை உலகிற்குக் காட்சிப்படுத்தப்படும். அந்தளவுக்கு இந்த அணிவகுப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படும். இந்தச் சூழலில் கிம் ஜான் திடீரென மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறை இல்லை
அதேநேரம் கிம் ஜாங் இப்படி பொதுவெளிக்கு வராமல் திடீரென மாயமாவது இது முதல்முறை இல்லை.. ஏற்கனவே, கடந்த காலங்களில் ஏகப்பட்ட முறை இதுபோல அவர் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாகியுள்ளதால் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு, அவர் அதிகபட்சமாக 40 நாட்கள் தொடர்ந்து மாயமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகளுக்கு முக்கியத்துவம்
வடகொரிய அதிபரைத் தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதுவரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றது இல்லை.. இந்தச் சூழலில் தான் கடந்த நவ. மாதம் அவர் முதல்முறையாகத் தனது மகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரது மகள் பெயர் கிம் சூ-ஏ என்று நம்பப்படுகிறது. கிம் ஜாங் உடல்நிலை குறித்த தகவல் ஒரு பக்கம் பரவும் நிலையில், மகளையும் அவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications