ஏர்ஏசியா விமானம் கடலில் விழும் முன்பு சீட்டை விட்டு எழுந்து சென்ற கேப்டன்
ஜகர்தா: ஏர்ஏசியா விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழும் முன்பு கேப்டன் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. இதில் அந்த விமானத்தில் இருந்த 162 பேரும் பலியாகினர். ஜாவா கடலில் இருந்து இதுவரை 70 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்பு பெட்டிகள் உள்ளிட்ட சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானம் கடலுக்குள் விழுகையில் அதை துணை விமானி ஓட்டியது தெரிய வந்துள்ளது. விமானத்தை கட்டுப்படுத்தும் கப்யூட்டரில் ஒரு வாரத்திற்கும் மேலாக கோளாறு இருந்துள்ளது. கோளாறுடனேயே விமானத்தை ஓட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி கோளாறு அதிகரிக்கவே கேப்டன் இரியான்டோ கட்டுப்பாட்டு கம்பூயூட்டர் சிஸ்டத்தை செயல் இழக்கச் செய்துள்ளார்.
அவர் அந்த சிஸ்டத்தை செயல் இழக்கச் செய்ய தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றுள்ளார். அப்போது துணை விமானி ரெமி பிளெசலின் பொறுப்பில் இருந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்துள்ளது.
கேப்டனின் இந்த செயல் விமான போக்குவரத்து துறை நிபுணர்களை வியக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருவதால் இது குறித்து கருத்து தெரிவிக்க ஏர்ஏசியா நிறுவனம் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications