அல்ஜசீரா டிவியில் யாசர் அராபத் ஆவணப்படம்
பாலஸ்தீனம்: யாசர் அராபத் மரணம் பற்றிய சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் ஆவணப்படமாக அல்ஜசீரா டிவி ஒளிபரப்புகிறது.
பாலஸ்தீனத்தின் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர்.
நோய்வாய்ப்பட்டு 2004-இல் தனது 75-ஆவது வயதில் பிரான்ஸ் நாட்டின் இராணுவ மருத்துவமனையில் நினைவு திரும்பாமலேயே இறந்துவிட்டார். அரவது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
அவர் பொலேனியம் என்ற விஷத்தின் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்து நாட்டின், லூசானே பல்கலைக் கழக, கதிர்வீச்சு துறை நிபுணர்கள், தங்கள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்து இருந்தனர்.
இதனை ‘கில்லிங் அராபத்' என்ற பெயரில் அல்ஜசீரா டிவி ஆவணப்படமாக எடுத்து ஒளிபரப்புகிறது.

பாரீஸ் சென்ற அராபத்
யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள், பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத், நோய் வாய்ப்பட்டதால், அவர், பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம், பாரீசுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கோமாவிலேயே மரணம்
2004ம் ஆண்டு, நவ., 11ம் தேதி, பாரீஸ் மருத்துவமனையில் இறந்தார். கோமா நிலையில் அராபத் இறந்த தால், பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல், அவரது உடல், அடக்கம் செய்யப்பட்டது.

மரணம் பற்றிய சர்ச்சை
அராபத் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளில், பொலேனியம் விஷத்தின் தடயங்கள் இருந்ததாக, சுவிட்சர்லாந்து நாட்டின், லூசானே பல்கலைக் கழக, கதிர்வீச்சு துறை நிபுணர்கள், தங்கள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். இதன் மூலம் அவர் பொலேனியம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என, அவர்கள் சந்தேகம் எழுப்பி இருந்தனர்.

மனைவியின் சந்தேகம்
இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில், பேட்டி அளித்த, அராபத்தின் மனைவி சுகா குறிப்பிடுகையில், என் கணவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள், என்னிடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நாடு அவரை கொன்றது என்பதை, தெரிவிக்க விரும்பவில்லை, என்றார். அராபத் மரணம் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என, பாலஸ்தீன விடுதலை அமைப்பு கோரியுள்ளது.

இஸ்ரேல் மீது சந்தேகம்
பாலஸ்தீன விசாரணை அதிகாரி, தவுபிக் திராவி குறிப்பிடுகையில், அராபத் மரணத்தில் எங்களுக்கு முழு சந்தேகம், இஸ்ரேல் நாட்டின் மீது தான், என்றார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல், அராபத் மரணத்தில், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என, தெரிவித்துள்ளது.

அல்ஜசீரா டிவியில்
யாசர் அராபத்தின் மரணம் பற்றிய சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் ‘கில்லிங் அராபத்' என்ற பெயரில் ஆவணப்படமாக பதிவு செய்து ஒளிபரப்புகிறது.
நவம்பர் 11 திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு இந்த ஆவணப்படம் முதன் முறையாக ஒளிபரப்பானது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கும் நவம்பர் 12ம் தேதி காலை 11.30 மணிக்கும், 13ம் தேதி மதியம் 1.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இதே ஆவணப்படம் 14ம் தேதி காலை 11.30 மணிக்கும், ஞாயிறன்று 16ம் தேதி மதியம் 1.30 மணிக்கும் மீண்டும் ஒளிபரப்பாகிறது.












Click it and Unblock the Notifications