ஏமனில் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த அல்- கொய்தா தீவிரவாதிகள்
ஏடன்: உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் ஏமனில் அல்-கொய்தா தீவிரவாதிகள் சிறை ஒன்றைத் தகர்த்து தங்கள் தலைவர் உட்பட 300 கைதிகளை விடுவித்துள்ளனர்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் அங்கு உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஏமன் ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகிறது. ஏடன், சனா உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

ஏமனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஏமனில் ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள சிறை ஒன்றை அல்-கொய்தா தீவிரவாதிகள் இன்று தாக்கியுள்ளனர். பின்னர், அச்சிறையில் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக அடைக்கப் பட்டிருந்த தங்கள் இயக்கத்தின் மூத்தத் தலைவர் காலித் படார்பி உட்பட 300 கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்க வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு சிறை அதிகாரிகள் மற்றும் 5 கைதிகள் கொல்லப் பட்டதாக ஏமன் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்ரமவுட் சிறை மட்டுமின்றி மாகாண தலைநகரான முகல்லாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திலும், வங்கி கிளை மற்றும் போலீஸ் தலைமையகத்திலும் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே போர் பதற்றத்தால் அச்சத்தில் இருக்கும் மக்கள், தற்போதைய சிறை தகர்ப்பு சம்பவத்தால் மேலும் பீதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications