நபிகள் நாயகத்தை தொடர்ந்து கிண்டல் செய்த சார்லி ஹெப்டோ
பாரீஸ்: தாக்குதலுக்கு உள்ளான பிரெஞ்சு பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ நபிகள் நாயகத்தை கிண்டல் செய்தும், அவர்களை நிர்வாணமாகவும் சித்தரித்து கார்டூன் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புதன்கிழமை புகுந்த முகமூடி அணிந்த 2 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர் ஸ்டெபனீ சார்போனியர் உள்பட 12 பேர் பலியாகினர். அவர்கள் அங்கிருந்து தப்பியோடும் முன்பு நபிகள் நாயகத்திற்காக பழிவாங்கிவிட்டோம் என்று கோஷமிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சார்லி ஹெப்டோ வார இதழ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,

ஹரா கிரி
ஹரா கிரி என்ற பிரெஞ்சு பத்திரிக்கையில் பணிபுரிந்தவர்கள் தான் சார்லி ஹெப்டோவை துவங்கினர். 1969ம் ஆண்டு துவங்கப்பட்ட சார்லி ஹெப்டோவுக்கு பிரான்காய்ஸ் கவானா ஆசிரியராக இருந்தார். 1981ம் ஆண்டு வரை அவர் தான் ஆசிரியராக இருந்தார். அதன் பிறகு பத்திரிக்கை நொடிந்து போனது. பின்னர் 1992ம் ஆண்டு புத்துயிர் பெற்ற பிறகு பிலிப்பே வால் ஆசிரியராக ஆனார். 2009ம் ஆண்டு வரை அவர் ஆசிரியராக இருந்தார்.

கிண்டல்
ஸ்டெபனீ கார்போனியர் 2012ம் ஆண்டு சார்லி ஹெப்டோவின் ஆசிரியர் ஆனார். சார்லி ஹெப்டோவில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், நீதிபதிகள் என்று பலரையும் கிண்டல் செய்து கார்டூன் வெளிவந்துள்ளது.

2006
2006ம் ஆண்டு சார்லி ஹெப்டோ டென்மார்க் பத்திரிக்கையில் வந்த நபிகள் நாயகத்தின் கார்டூனை தங்கள் பத்திரிக்கையில் அதுவும் அட்டைப் படத்தில் வெளியிட்டது. அத்துடன் அவர்களும் நபிகள் நாயகம் பற்றி ஒரு கார்டூனை வரைந்து வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நபிகள் நாயகம்
2011ம் ஆண்டு சார்லி ஹெப்டோவின் சிறப்பு பிரதியின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தின் கார்டூனை போட்டு -நீங்கள் சிரித்து சிரித்தே இறக்காவிட்டால் ஆயிரம் கசையடி என்று எழுதியிருந்தது.

சாரியா
பத்திரிக்கையின் பெயரை சிறிது காலம் சாரியா ஹெப்டோ என்று மாற்றினர். ஷரியா என்பதன் பிரெஞ்சு வார்த்தை தான் சாரியா. அதாவது பத்திரிக்கையின் சிறப்பு ஆசிரியர் நபிகள் நாயகம் என்று கூற அவ்வாறு பெயரை மாற்றினர்.

தாக்குதல்
நபிகள் நாயகத்தை பத்திரிக்கை ஆசிரியர் என்று கிண்டல் செய்ததை அடுத்து சார்லி ஹெப்டோவின் அலுவலகங்கள் மீது குண்டு வீசப்பட்டது. மேலும் பத்திரிக்கை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

2012
2012ம் ஆண்டு சார்லி ஹெப்டோவில் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து பல கார்டூன்கள் வெளியிடப்பட்டது. ஒரு கார்டூனில் யூதர் ஒருவர் தலைப்பாகை அணிந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபிகள் நாயகத்தை தள்ளுவது போன்று இருந்தது. மற்றொரு கார்டூனில் நபிகள் நாயகத்தை நிர்வாணமாக வரைந்திருந்தனர்.

ஆசிரியர் பலி
ஸ்டெபனீ சார்போனியருக்கு(47) பலமுறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அவர் போலீஸ் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதலில் சார்போனியர் கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications