துருக்கிக்கு உதவ முன்வந்த அமேசான், ஆப்பிள் நிறுவனங்கள்! தனிநபர்களும் உதவி செய்யலாம்.. முழு விவரம்
தனிநபர்கள் உதவுவதற்கு சில தொண்டு நிறுவனங்களின் பெயர்களை TIME பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து தெரிந்து கொள்ளவும் CharityWatch வெப்சைட்கள் உதவுகின்றன.
அங்காரா: கடந்த 6ம் தேதி துருக்கியை மற்றும் சிரியாவை தாக்கிய நிலநடுக்கம் 26 ஆயிரம் பேரை பலிவாங்கியதுடன் பல லட்சக்கணக்கானோரை நிர்க்கதியாக நிற்க வைத்திருக்கிறது. இவர்களுக்கு அமேசான், ஆப்பிள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் உதவி செய்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 அளவில் உணரப்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் துருக்கி மற்றும் சிரியாவில் மொத்தமாக 6,000க்கும் அதிகமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் ஒருபுறம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க, வீடுகளை இழந்தவர்கள் மறுபுறம் எலும்பை உறையவைக்கும் பனியில் திறந்தவெளியில் புகலிடம் இன்றி தவித்துக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து உலக நாடுகள் அனுப்பிய நிவாரண பொருட்கள் ஓரளவு இவர்களின் அவல நிலையை போக்க உதவியுள்ளது. ஆனாலும் இன்னும் லட்சக்கணக்கான மக்களுக்கு உடை, உணவு, மருந்து பொருட்கள் தேவைப்படுகிறது. எனவே இவற்றை அனுப்ப விரும்புவோர் அதனை அனுப்பி வைக்கலாம் என்று தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்த அழைப்பை ஏற்று அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்ட தொடங்கியுள்ளன.

அமேசான்
அமேசான் நிறுவனம் உணவு பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு, போர்வைகள், கூடாரங்கள் மற்றும் மருந்து பொருட்களை கடந்த 8ம் தேதி முதல் இஸ்தான்புல்லில் இருந்த குடோனிலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் பேரிடர் நிவாரணத் திட்டத்தின் தலைவர் அபே டயஸ் கூறுகையில், "அமேசான் இந்த வேதனையை புரிந்துகொண்டிருக்கிறது. எனவே உடனடியாக இதற்கு வினையாற்றுகிறது. தற்போது உணவு, போர்வை மற்றும் மருந்துகளை இலவசமாக கொடுத்து வருகிறோம். இந்த உதவி தேவை இருக்கும் வரை தொடரும்" என்று கூறியிருந்தார்.

Deutsche Telekom
அதேபோல ஜெர்மனியில் இயங்கி வரும் Deutsche Telekom எனும் தொலை தொடர்பு நிறுவனம் வரும் 15ம் தேதி வரை ஜெர்மனியிலிருந்து துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனைத்து அழைப்புகளையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் மக்கள் ஜெர்மனிக்குதான் அகதிகளாக புலம் பெயர்ந்துள்ளனர். உலக அளவில் அதிக அகதிகள் கொண்ட மூன்றாவது பெரிய நாடு ஜெர்மனியாகும். எனவே இங்கிருப்பவர்கள் தங்கள் சொந்தங்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள உதவும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக Deutsche Telekom நிறுவனம் கூறியுள்ளது. இது மட்டுமல்லாது ஜெர்மனியிலிருந்து இயங்கும் உதவி குழுக்களுக்கு சுமார் ரூ.9 கோடியை நன்கொடையாக கொடுத்திருக்கிறது.

எந்தெந்த நிறுவனங்கள்
நிறுவனங்கள் இவ்வாறு உதவுகையில் பல்வேறு தனி நபர்களும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இவ்வாறு தனிநபர்கள் நன்கொடை வழங்க விருப்பினால் அதற்கு சில அமைப்புகள் உதவ முன்வந்துள்ளன. அதாவது,
Syrian American Medical Society.
UNHCR, the UN Refugee Agency.
The United Nations International Children's Emergency Fund.
The White Helmets.
Turkish Red Crescent.
International Rescue Committee.
Save the Children.
Global Giving.
Project Hope.
Humanitarian Relief Foundation.
Doctors Without Borders.
Direct Relief.
CARE.

எப்படி சரிபார்ப்பது
போன்ற நிறுவனங்கள் தனிநபரின் உதவியை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக TIME பத்திரிகை தெரிவித்திருக்கிறது. அதேபோல இவ்வாறு நிதி உதவி செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களின் உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டியது அவசியம். இதற்காக CharityWatch மற்றும் Charity Navigator என இரண்டு வெப்சைட்கள் இயங்கி வருகின்றன. இவை தொண்டு நிறுவனங்களின் நிதி, நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் நிலைகள் பற்றி ஆய்வு செய்து முடிவுகளை வழங்குகின்றன.












Click it and Unblock the Notifications