சர்வதேச நீதிபதிகளை கொண்டே போர்க் குற்ற விசாரணை... இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா முடிவு
வாஷிங்டன் : இலங்கை போர் குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை கொண்டே விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமைகளின் ஆணையரின் அறிக்கை கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசு கூறிவருகிறது.
இலங்கை அரசே விசாரணை நடத்த ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், விசாரணைக்கான அவகாசத்தை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபை 30-வது அமர்வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. வரும் 24-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிபார்க்கப்படும் அந்த தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதில் இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள போர்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. ஓர் ஆண்டுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் அமெரிக்கா கூறியுள்ளதாக தெரிகிறது.
வரைவு தீர்மான நகலை இலங்கை அரசிடம் கடந்த 17-ம் தேதியே வழங்கி விட்ட அமெரிக்கா வரும் 21-ம் தேதி இலங்கை அரசு பிரநிதியுடன் ஆலோசனை நடத்தி தீர்மானத்தை இறுதி செய்ய உள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதால் போர்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications