இந்தியாவுக்கு சலுகையாம்.. பருவநிலை மாற்ற பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீர் வெளியேற்றம்!
வாஷிங்டன்: பருவநிலை மாற்றத்தின் பேரழிவுத் தாக்கங்களிலிருந்து பூமியை பாதுகாக்க விரும்பும் 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
"அமெரிக்காவை பாதுகாப்பதே எனது கடமை. அதை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகிவிடும்," என உலகிலேயே அதிக மாசுக்களை வெளியிடும் இரண்டாவது மிகப்பெரிய நாட்டின் அதிபரான ட்ரம்ப் கூறியுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அமெரிக்கா, அதன் வியாபாரம்-தொழில்கள், அதன் மக்கள், அதன் வரி செலுத்துவோர் ஆகியவற்றுக்கு நியாயமான வகையில் இருக்க விரும்புகிறது. எனவே பாரிஸ் உடன்படிக்கையை "முற்றிலும் புதிய" உடன்படிக்கையாக மாற்றி மறுபடியும் இணைந்துகொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம்" என்று டிரம்ப் கூறினார்.

பொருளாதார காயம்
டிரம்ப் மேலும் கூறுகையில், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை பெரும் நிதி தீமைக்கு தள்ளிவிட்டு, பிற நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உள்ளது. பாரிஸ் உடன்பாடு என்பது அமெரிக்கா "சுய விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட பெரும் பொருளாதார காயம்" என்று குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு சலுகை
இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சலுகை வழங்குவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார். 2020 ம் ஆண்டுக்குள் இந்தியா தனது நிலக்கரி உற்பத்தியை இரட்டிப்பாக்க அனுமதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

சிரியா இணையவில்லை
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நிலையில் இப்படி ஒப்பந்தத்திற்கு வெளியே செல்லும் மூன்றாவது நாடாக அது மாற உள்ளது. நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் எப்போதுமே இணைந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தைக்கு ரெடி
பாரிஸ் உடன்பாட்டை அமெரிக்காவிற்கு நியாயமாக மாற்றுவதற்கு ஏற்ப பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறினார். அதுவரை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் கூறஇயுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார், ஆனால் அனைத்து பங்கேற்பு நாடுகளிலும் சமமான முறையில் ஒப்பந்தம் இயங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதுதான் ஒப்பந்தம்
2015 ஆம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை இயன்ற அளவு குறைப்பது. சீனாவும் அமெரிக்காவும்தான் உலகத்திலேயே அதிக அளவு கரியமில வாயுவை உமிழும் தேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications