அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தொடர்ந்து 3வது முறையாக தேர்வு.. இந்திய வம்சாவளி அமிபேரா சாதனை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமிபேரா தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி சாதனைப் படைத்துள்ளார்.
வாஷிங்டன்: ஜனநாயக் கட்சி சார்பில் களம் இறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமிபேரா குடியரசுக் கட்சி வேட்பாளரை வீழ்த்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தொடர்ந்து 3-வது முறையாக தேர்வாகி சாதனைப்படைத்துள்ளார்.
51-வயதுடைய அமிபேரா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு தொடர்ந்து 3-வது முறையாக தேர்வாகியுள்ள முதல் இந்திய வமசாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.
இவருடன் இலியானாவிலிருந்து ராஜா கிருஷ்ணமூர்த்தி, வாஷிங்டனில் இருந்து பிரமிளா ஜெயபால், கலிபோர்னியா மகாணத்திலிருந்து ரோ கண்ணா ஆகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர்.
அமிபேரா குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஷெரீப் ஸ்காட் ஜோன் என்பவரை வீழ்த்தி பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார். பிரநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் தேர்வாகி இருப்பதுவும் இதுவே முதல் தடவையாகும்.
சாக்ரமெண்டோ கவுண்டி தேர்தல் பதிவாளர் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட்டு அமிபேரா வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளார்.
கலிபோர்னியா மகாணத்தின் சாக்ரமெண்டோ கவுண்டியில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஷெரீப் ஸ்காட் ஜோன்சைவிட 2 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று அமி பேரா வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிக நாட்கள் பணியாற்றிவர்கள் பட்டியலில் அமிபேராவும் இணைந்துள்ளார்.
இதற்கு முன் 1957-1963 ஆம் ஆண்டு கால கட்டத்தில் திலீப் சிங் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் 3 முறை தேர்வாகி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிபேரா அடிப்படையில் மருத்துவர் ஆவார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றியது தனக்கு கிடைத்த கவுரவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய, அதிபர் ஒபாமாதான் அமிபேராவை முன்மொழிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.