ஸ்பீடாக பரவும் கொரோனா.. பதறும் ஜி ஜின்பிங்.. பதவியை ராஜினாமா செய்ய வெடித்த போராட்டம்.. பரபர சீனா
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளால் தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதில் 10 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி உள்ளனர். அதிபர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி நாள்தோறும் போராட்டம் வீரியமடைவதால் ஜி ஜின்பிங் அதிர்ச்சியடைந்த நிலையில் சீனாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சீனா.. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதற்கிடையே தான் கடந்த 2019 இறுதியில் சீனாவின் வூகானில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸ் ஒட்டுமொத்த நாடுகளையும் முடக்கியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல..

2 ஆண்டு முடக்கம்
ஏறக்குறைய 2020 துவக்கத்தில் இருந்து பல நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இருப்பினும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 2 ஆண்டு முடக்கத்துக்கு பிறகு தற்போது உலக நாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன.

சீனாவில் மீண்டும் அதிகம்
இந்நிலையில் தான் மீண்டும் சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சீனாவில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு என்பது சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பயத்தில் உள்ளனர்.

கடும் கட்டுப்பாடுகள்
இதற்கு முக்கிய காரணம் உள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானவர்கள் அறிகுறியற்ற நிலையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு என்பது இன்னும் அதிகமாகலாம் என கூறப்படுகிறது. இதனால் அதிபர் ஜி ஜின்பிங் பதற்றமடைந்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக பல இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி சீனாவில் ஏதேனும் ஒரு பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர் வசிக்கும் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றிய பகுதிகள் முழுமையாக முடக்கம் செய்யப்படுகின்றன. அதன்படி சீன அரசு ஜின்ஜியாங் உள்ளிட்ட பல மாகாணங்களில் தீவிர ஊரடங்கு அமலில் உள்ளது. ஜின்ஜியாங் மகாணத்தின் தலைநகர் உரும்கி நகரில் 4 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டை விட்டு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தில் 10 பேர் பலி
இதற்கிடையே தான் கடந்த வியாழக்கிழமை உரும்கி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் இறந்தனர். ஊரடங்கு இருந்ததால் பொதுமக்கள் வெளிவராமல் இருந்தனர். மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமான இடங்களில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மீட்பு பணி தாமதமான நிலையில் 10 பேர் பரிதாபமாக இறந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்..

வெடித்த போராட்டம்
இந்நிலையில் தான் ஒரு தரப்பு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக திரண்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தவறிய ஜி ஜின்பிங் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக சீனாவில் ஷாங்காயில் மக்கள் வீதிகளில் இறங்கி அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது உரும்கி தீவிபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டத்தை துவக்கினர்.

ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கோஷம்
ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கோஷமிட்டனர். அதோடு நாட்டில் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து 3வது ஆண்டாக கொரோனா பரவல் என்பது உள்ளது. இதனை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பு ஏற்று உடனடியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து வீரியமடைந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிபர் ஜி ஜின்பிங் அதிர்ச்சியடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications