'வெறும் 12 நாட்கள்..' என்னவாகும் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் வாழ்க்கை? வரிசை கட்டி நிற்கும் சவால்கள்
ஒட்டாவா: கனடாவில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்த முறை பல சிக்கல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் தற்போது வரை வெளியான கருத்துக்கணிப்புகளிலும்கூட அவரால் முன்னிலை பெற முடியவில்லை.
கனடா நாட்டில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் களமிறங்குகின்றனர்.
சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்த முறை நிலைமை சாதகமாக இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவருக்கு பல்வேறு சிக்கல்கள் அணிவகுத்து நிற்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

கனடா தேர்தல்
கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019இல் தான் அங்குப் பொதுத்தேர்தல் நடந்த நிலையில், இப்போது அங்கு மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பெற ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியால் முடியவில்லை. இதனால், இப்போது வெறும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாராகிவிட்டார் ஜஸ்டின் ட்ரூடோ. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அங்கு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் முன் கூட்டியே தேர்தல்
கடந்த 1.5 ஆண்டுகளாக கொரோனாவை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதால், ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. அங்கு 15 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 27 ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கிடைத்த நல்ல பெயரை அப்படியாக வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதே ஜஸ்டின் ட்ரூடோவின் எண்ணம். இதனால் தான் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ள அவர் தயாரானார்.

கருத்துக்கணிப்பில் ஏமாற்றம்
ஆனாலும், இதுவரை தேர்தல் தொடர்பாக வெளியான கருத்துக்கணிப்புகள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு மக்களிடையே 34% ஆதரவும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 30% ஆதரவும் இருந்தது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு செல்வாக்கு 32%ஆக குறைந்தது. அதேநேரம் கன்சர்வேடிவ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு 34% ஆக அதிகரித்தது. தேர்தல் கருத்துக்கணிப்பிற்கும் வாக்குப்பதிவுக்கும் 2 முதல் 4 சதவிகிதம் வரை மாறுபாடு இருக்கும் என்பதால் இப்போது இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அளவு கடந்த எதிர்பார்ப்பு + ஊழல் புகார்
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு காலத்தில் கனடா மக்களிடையே மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தார். அதனால் தான் 2015 தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 184 இடங்களில் வென்று, 10 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் ஆட்சியை அவரால் வீட்டுக்கு அனுப்ப முடிந்தது. இருப்பினும், மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் ஜஸ்டின் ட்ரூடோ மீது இருந்ததால், அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இத்துடன் ஊழல் புகார்களும் கிளம்ப அது அவரது பெயரை டேமெஜ் செய்தது.

மைனாரிட்டி அரசு
இதனால் 2019 தேர்தலில் அவரால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற முடியாமல் போனது. இதனால் ஒவ்வொரு மசோதாவை நிறைவேற்றும்போதும், அவருக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. மக்களிடையே ஆதரவு குறைந்த வந்த நேரத்தில் தான் கொரோனா பரவல் ஏற்பட்டது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா காரணமாக ஆளும் கட்சி அவப்பெயரையே சம்பாதித்து இருந்தது. ஆனால், கனடாவில் நிலைமை நேர் மாறானது. வைரசைச் சிறப்பாகக் கையாண்டதால் ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது மக்களுக்கு இருந்த அவப்பெயர் நீங்கியது, ஆதரவும் அதிகரித்தது.

அரசியல் எதிர்காலம்
அதேபோல கட்சியிலும் முன்போல தனிப்பெரும் தலைவராக அவரால் இருக்க முடியவில்லை. இப்போதைக்கு ஜஸ்டின் ட்ரூடோ அளவுக்கு மக்கள் செல்வாக்கு யாருக்கும் இல்லை என்பதாலேயே அக்கட்சியின் மற்ற தலைவர்கள் அமைதியாக உள்ளனர். மைனாரிட்டி அரசு எப்போதும் ஆபத்தான ஒன்று என்பதை அவருக்குத் தெரிந்ததாலேயே முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ளத் தயாரானார். இந்தத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

கட்டாய தடுப்பூசி கொள்கை
இருப்பினும் தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து நிலைமை ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. அரசு ஊழியர்கள், பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்குக் குறிப்பிட்ட அளவிலான மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுக்கும் வகையிலான செயல் என்று கூறி ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுதான் தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும் எதிரொலித்துள்ளது.

வலுவடையும் போராட்டம்
நாளுக்கு நாள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிரான போராட்டம் உக்ரமடைந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் இறுதியில் பாதுகாப்பு காரணங்களால் தனது பயணத்தையே ஜஸ்டின் ட்ரூடோ ரத்து செய்ய வேண்டி இருந்தது. அதேபோல நேற்று முன்தினம் பரப்புரை நிகழ்ச்சியை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களில் ஒருவர், ஜஸ்டின் ட்ரூடோ மீது கற்களை எரிந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடக்கும்
ஆனால், இதுவரை போராட்டகாரர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஜஸ்டின் ட்ரூடோ வலுவாக எடுத்து வருகிறார். ஒரு வன்முறை குழுக்களுக்குப் பயந்து பொதுமக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உலகளவில் வேக்சின் பணிகளில் சிறப்பாக உள்ள நாடுகளில் ஒன்றாகக் கனடா உள்ளது. கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் கூட மற்ற நாடுகளைவிட மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தியது மற்றும் போராட்டக்காரர்களுக்கு அஞ்சாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்ற இமேஜ் இவர் மீது ஏற்பட்டுள்ளது. இது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், தற்போது கருத்துக்கணிப்பில் சற்றே பின்தங்கி இருந்தாலும்கூட மீண்டும் மூன்றாவது முறையாகப் பிரதமராகும் வாய்ப்பு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அதிகமாக உள்ளதாகவே அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications