அமெரிக்காவில் டிரம்ப் கலந்து கொண்ட மாநாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சியில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட மாநாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சீனாவில் கடந்த ஆண்டு வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இந்த நோயின் தாக்கத்தால் சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை 3000-ஐ தாண்டியது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய நோயால் வாஷிங்டன்னில் 16 பேரும் கலிபோர்னியாவில் ஒருவரும் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 2 முதியவர்கள் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர்.
இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. மேலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350ஐ நெருங்கியது.
கடந்த வாரம் மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் டொனால்ட் டிரம்ப், மைக் பைன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் அங்குள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேரிலாந்து அரசியல் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் கொரோனா வைரஸுக்கு ஆளாக நேரிடும் என கவலைப்படுகிறீர்களா என கேட்டனர்.
அதற்கு அவர் நான் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என பதில் அளித்தார். வைரஸ் பரவி வருவதால் எந்தவொரு அரசியல் பேரணியையும் தனது நிர்வாகம் ரத்து செய்துவிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.