நடுகடலில் மரண போராட்டம்..ஜப்பான் கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பீதியில் இந்தியர்கள்
Recommended Video
டோக்கியோ: ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட ஹாங்காங் நிறுவனத்தின் கப்பலில் மேலும் 70 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது. மொத்தம் 355 பேர் இதுவரை அந்த கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சீனாவில் இருந்து ஹாங்காங்கைச் சேரந்த கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி டோக்கியோவின் தெற்கே யோகோகாமாவுக்கு பயணிகள் பணியாளர்கள் என 3700 பேருடன் வந்தது.
அப்போது ஜப்பானுக்குள் செல்வதற்கு முன்பு ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது
நடுக்கடலில் கப்பல்
அதன்பிறகு கப்பலை தனிமைப்படுத்திய ஜப்பான் அரசு யாரையும் ஜப்பானுக்குள் இறங்க அனுமதிக்காமல் அவர்களை கப்பலிலேயே சிறை வைத்தது. அந்த கப்பலில் 137 இந்தியர்கள் தங்களை எப்படியாவது இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு மன்றாடி வருகின்றனர். இதேபோல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்கிறார்கள். ஆனால் ஜப்பான் அரசு அனைவரையும் சோதித்த பின்னரே முடிவுசெய்வோம் என்று தீர்மானமாக இருக்கிறது.
3700 பேர் உள்ளார்கள்
இந்நிலையில் அந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 3700 பேர் உள்ள நிலையில் தினமும் இரட்டை இலக்கத்தில் புதிது புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடுகடலில் மரண போராட்டத்துன் அவர்கள் தத்தளித்து வருகிறார்கள்.
தினமும் சோதனை
இதுவரை 355 பேர் கொரோனா பாதிப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களை ஜப்பான் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறது. மற்றவர்களை கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை தினமும் சோதித்து ஆராய்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு வெளியில் தெரிய குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்பதால் அவர்களை தனிமைப்படுத்தியே வைத்துள்ளது.
355 ஆக உயர்வு
நேற்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் மொத்தம் 355 பேர் இதுவரை அந்த கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதன் மூலம் அதன் பாதிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. ஜப்பான் கப்பலில் உள்ள 137 இந்தியர்களை நாட்டுக்கு கொண்டுவருவது இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.