வெங்காய பஜ்ஜியை சுவைத்துக்கொண்டே.. இந்தியர்களுக்கு எதிராக முழக்கம்! லண்டனில் வலதுசாரிகள் அட்டூழியம்
லண்டன்: இந்தியர்கள் பிரிட்டனில் குடியேறி, பிரிட்டன் மக்களின் உரிமைகளை எல்லாம் பறித்துவிட்டதாக வலதுசாரிகள் பிரிட்டன் வாழ் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் காமெடி என்வெனில், இந்த போராட்டக்காரர்கள் வெங்காய பஜ்ஜியை சாப்பிட்டுக்கொண்டே, இந்தியர்களுக்கு எதிராக முழக்கமிடுகிறார்கள் என்பதுதான்.
உள்நாட்டு குழப்பம் ஏற்படும்போதும், அரசு நிலையற்றதாக இருக்கும்போதும் அந்த இடங்களில் திடீர் தேசபக்தி முளைக்கும். அப்படித்தான் பிரிட்டனில் திடீர் தேசபக்தி முளைத்து, இந்தியர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கிறது.

குறைந்த கூலிக்கும், எந்தவித தொழில் பாதுகாப்பும் இல்லாத வேலைக்கும் இந்தியர்கள் வரும்போது, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற பிரிட்டன், இன்று இந்தியர்களுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியிருக்கிறது. இந்தியர்களின் குடியேற்றத்தால் பிரிட்டன் நாசமாக்கப்பட்டிருக்கிறது, பிரிட்டனின் கலாச்சாரம் அழிக்கப்பட்டிருக்கிறது, பிரிட்டன் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்றெல்லாம் சொல்லி தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன் தலைமையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பிரிட்டன் மக்கள் இன்று குடியேற்றத்திற்கு எதிராக பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.
'யுனைட் தி கிங்டம்' என்கிற பெயரில் இந்த பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. பேரணியில் பங்கேற்றிருந்த மக்கள் இந்தியா உட்பட வெளிநாட்டினரின் குடியேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த பேரணியில் மக்களிடம் உரையாற்றிய தீவிர வலதுசாரி பிரெஞ்சு அரசியல்வாதியான எரிக் ஜெம்மூர், "நம் ஐரோப்பிய மக்களை, தெற்கிலிருந்து வரும் மக்கள் மற்றும் முஸ்லிம் கலாச்சாரத்தால் மாற்றியமைக்கிறார்கள். நாமும் நம் முன்னாள் காலனி நாடுகளால் காலனித்துவப்படுத்தப்படுகிறோம்" என்று பேசியிருக்கிறார்.
இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த எலான் மஸ்க், காணொளி வாயிலாக போராட்டக்காரர்களிடம் பேசியிருந்தார். அவர் பேசுகையில், "பிரித்தானியராக இருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. இங்கே நடப்பது பிரித்தானியாவின் அழிவு. ஆரம்பத்தில் மெதுவான அரிப்பாக இது தொடங்கியது. ஆனால் கட்டுப்பாடற்ற குடியேற்றத்தால் பிரிட்டன் அழிந்துக்கொண்டு வருகிறது" என்று விஷத்தை கக்கியிருக்கிறார்.
சரி இப்படியெல்லாம் பேசிய வலதுசாரிகள் தங்கள் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் போராட்டக்காரர்கள் வெங்காய பஜ்ஜியை வாங்கி சுவைத்துக்கொண்டே இந்தியர்களுக்கு எதிராக கோஷம் போடுகிறார்கள். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், "பிரிட்டனில் ஏது வெங்காய பஜ்ஜி? நாங்க கொண்டு வந்த உணவு வேண்டும், எங்கள் உழைப்பு வேண்டும் ஆனால் நாங்கள் வேண்டாமா?" என்று இந்தியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications