"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை
டெல்லி: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஈரானின் இந்த தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ள இதர வளைகுடா நாடுகள், இது தொடர்பாக கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் ஈரான் மீது ராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்து வருகிறது. 4வது வாரமாக மோதல் தொடரும் சூழலில், தற்போது போர் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானும் விடாமல் பதிலடி கொடுத்து வருகிறது. இதர வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வளைகுடா நாடுகள்
இதற்கிடையே பொறுத்தது போதும் என வளைகுடா நாடுகள் கொந்தளித்துவிட்டன. ஈரானும் அதன் பினாமிப் படைகளும் நடத்தும் தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என இதர வளைகுடா நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய ஆறு நாடுகள் இது தொடர்பாக கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கூட்டறிக்கை
வெறுமன எதிர்ப்பாக மட்டுமின்றி, மீண்டும் ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை சர்வதேச சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆறு அரபு நாடுகளும் குறிப்பிட்டுள்ளன. அந்த அறிக்கையில் மேலும், "எங்களின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க எங்களுக்கு உரிமை உண்டு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தற்காத்துக் கொள்ளும் உரிமை
ஐ.நா. சாசனத்தின் 51வது பிரிவின்படி, ஒரு நாடு தாக்குதலுக்கு உள்ளாகும் போது, பாதுகாப்புச் சபை தேவையான நடவடிக்கை எடுக்கும் வரை, தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ தற்காத்துக் கொள்ளும் உரிமை நாடுகளுக்கு உண்டு. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களின் போது, ஈரான் அண்டை நாடுகளில் உள்ள எரிசக்தி ஆலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்த சூழலில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கண்டிப்பு
ஈரானின் இந்த தாக்குதலைக் கடுமையான கண்டிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட்டில் மேலும், "இத்தகைய தாக்குதல்கள், ஈரானால் நேரடியாகவோ அல்லது அதன் பினாமிப் படைகள் மூலமாகவோ அல்லது ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களாலோ நடத்தப்படுகிறது. இது இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம், ஐ.நா. சாசனம் ஆகியவற்றின் கடுமையான மீறல்களாகும்.
பினாமிப் படைகளைத் திரட்டுவது உட்பட, அண்டை நாடுகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் அல்லது அச்சுறுத்தல்களை ஈரான் உடனடியாகவும், நிபந்தனையின்றியும் நிறுத்த வேண்டும். அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்திப் பாதுகாப்பைக் குலைக்கும் ஈரானுக்கு விசுவாசமான ரகசிய ஏஜென்ட்டுகள் மற்றும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுக்களின் செயல்களையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications