5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானை! நீண்ட தந்தம் கண்டுபிடிப்பு.. ப்பா இவ்வளவு பெரிதா?
ஜெருசலேம்: இஸ்ரேலில் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானையின் தந்தத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தந்தம் மட்டுமே 8.5 அடி நீளம் இருக்கும் நிலையில், அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்த யானைகள் எவ்வளவு பெரிதாக இருக்கும் என கணித்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
நம் பூமியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான ராட்சத உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன. டைனோசர்கள், 60 அடி நீளமுள்ள மெகலோடான் சுறாக்கள், மமூத், மிகப்பெரிய முன் பற்களை கொண்ட புலி, கருப்பு காண்டாமிருகங்கள் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து அழிந்துவிட்டன.

இஸ்ரேலில் நடந்த அகழ்வாராய்ச்சி
அகழ்வாராய்ச்சிகள் மூலமாகவே இதுபோன்ற உயிரினங்கள் பூமியில் வாழ்ந்திருப்பது நமக்கு தெரிய வந்திருக்கிறது. இன்னும் உலகில் பல பகுதிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்படும் விஷயங்கள் நம்மை தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள ரேவாடிம் என்ற கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

ராட்சத யானையின் தந்தம்
இதில் கடந்த வாரம் ஒரு இடத்தை தோண்டும் போது மண்ணில் புதைந்த நிலையில் ஒரு மிகப்பெரிய மரக்கட்டையை போல ஒரு பொருள் கிடைத்துள்ளது. இதையடுத்து, அதனை தண்ணீரில் கழுவி பார்த்த போது அகழ்வாராய்ச்சியாளர்களே வியப்பில் சமைந்துவிட்டனர். ஏனெனில் அது 5 லட்சம் ஆண்டுகள் பழமையான ஒரு யானையின் தந்தம். அந்த தந்தத்தின் நீளமே 8.5 அடி ஆகும். மொத்த எடை 150 கிலோ. இப்பொழுது இருக்கும் ஆசிய யானையின் தந்தத்தின் அதிகபட்ச உயரமே 5 அடி தான்.

ஆப்பிரிக்க யானைகள் எல்லாம் ஜுஜுபி
இதை வைத்து பார்க்கும் போது, 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானைகள் 17 அடி உயரம் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது நமது ஆசிய யானைகளையும் (8 அடி), இப்போதைக்கு பெரிதாக கருதப்படும் ஆப்பிரிக்க யானைகளையும் (10 அடி) இந்த பழமையான யானையின் அருகே நிறுத்தினால் அதன் குட்டிகளை போல இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய ராட்சத யானை இருந்திருப்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.

மைல் கல்
இது அகழ்வாராய்ச்சியின் வரலாற்றில் ஒரு மைல் கல் என அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். மேலும், இந்த யானை தந்தம் அருகே உள்ள பகுதிகளில் விலங்குகளை வெட்டுவதற்கும், தோலை உரிப்பதற்கும் பயன்படும் கருவிகள் இருந்தன. அப்படியென்றால், 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே யானை போன்ற விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடி உள்ளனர் என்பதை ஓரளவுக்கு யூகிக் முடிகிறது என அவர்கள் கூறினர். இந்த யானை தந்தம் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சிக் கூடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்குதான் இது சரியாக எத்தனையாவது நூற்றாண்டை சேர்ந்த யானை என்பது தெரியவரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications