கருப்புப் பண விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது ஸ்விட்சர்லாந்து: அருண் ஜேட்லி
டாவோஸ்: ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அரசு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு சென்றுள்ள ஜேட்லி, ஸ்விட்சர்லாந்து நாட்டின் நிதியமைச்சர் உயேலி மெளரரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் ஜேட்லி அளித்த பேட்டி:
கருப்புப் பணத்தை ஒழிக்கும் விவகாரத்தில் ஸ்விட்சர்லாந்து அரசு சிறப்புக் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. கணக்கில் வராத பணத்துக்கு எதிராக சர்வதேச சமுதாயம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் அந்நாட்டு அரசும் பங்கெடுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஏதுவான சட்டத்தை உருவாக்கும் பணியில் ஸ்விட்சர்லாந்து ஈடுபட்டுள்ளது.
கருப்புப் பணம் குறித்த தகவல்களை தானியங்கி முறையில் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்வதற்கு ஏதுவாக ஸ்விட்சர்லாந்து அரசு சட்டம் இயற்றி வருகிறது. அது அடுத்த ஓராண்டுக்குள் அமலுக்கு வந்துவிடும்.
அதுவரை, கருப்புப் பண விவகாரம் தொடர்பாக கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவும், ஸ்விட்சர்லாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தமே நடைமுறையில் இருக்கும்," என்றார் ஜேட்லி.












Click it and Unblock the Notifications