‛வாட்டர் பாம்’.. நமக்கு எதிராக தண்ணீர் குண்டை கையில் எடுக்கும் சீனா! எல்லையில் ரகசிய பணி - வார்னிங்
பெய்ஜிங்: திபெத்தின் கைலாய மலையில் உருவாகி சீனா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து கடலில் கடக்கும் பிரம்மபுத்திரா நதிக்கு (சீனாவில் யார்லங்க் டிசாங்போ) நடுவே சீனா ரகசியமாக அணை கட்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்த அணை அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமையும் சூழலில் நம் நாட்டுக்கு எதிராக சீனா ‛வாட்டர் பாம்' திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பாகிஸ்தான், வங்கதேசத்துடன் இணைந்து சீனா நம் நாட்டுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி எல்லையில் நம் நாட்டுக்கு சொந்தமான இடங்களை தனக்கு சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. குறிப்பாக நம் நாட்டுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேச மாநிலம் சீனாவுக்கு தான் சொந்தம் என்று அதிபர் ஜி ஜின்பிங் அரசு வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையே தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திபெத்தின் கைலாய மலையில் பிரம்மபுத்திரா என்று நதி உருவாகி வருகிறது. இந்த நதி சீனா, இந்தியா வழியாக வங்கதேசம் சென்று அங்கிருந்து வங்காளவிரிகுடாவில் கலக்கியது. உலகின் மிக நீண்ட நதிகளில் இதுவும் ஒன்று. நம் நாட்டில் இந்த நதி பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. சீனாவில் இந்த நதி ‛யார்லங் சாங்கோ' என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்த நதிக்கு குறுக்காக நம் நாட்டை மிரட்டும் வகையில் சீனா புதிய அணையை கட்டும் பணியை தீவிரமாக தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான திட்டத்துக்கு 2024ல் சீனா ஒப்புதல் வழங்கியது. தற்போது மிகவும் ரகசியமாக பணி தொடங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்த அணை நம் நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 137 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் பிரமாண்டமாக இந்த அணை கட்டப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் சீனாவின் மின்தேவையில் 30 சதவீதத்தை இந்த அணை மூலமாக பூர்த்தி செய்ய முடியும். சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே த்ரீ கார்கிஸ் (மூன்று பள்ளத்தாக்குகள்) என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது. அதைக் காட்டிலும் 3 மடங்கு பெரியதாக இந்த அணையை சீனா கட்ட முடிவு செய்துள்ளது. இது நம் நாட்டின் எல்லையில் அமைய உள்ளதால் நமக்கு கிடைக்கும் தண்ணீர் கிடைக்காமல் போகலாம். அதேபோல் மழை காலத்தில் சீனா அதிகப்படியான தண்ணீரை அணையில் இருந்து திறந்தால் அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் இந்த அணை நம் நாட்டுக்கு எதிரான ‛தண்ணீர் பாம்' என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே,சீனா கட்டும் அணை இந்தியாவுக்கு தண்ணீர் வெடிகுண்டு போன்றது என்று அருணாசல பிரதேச முதல் மந்திரி பெமா காண்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
சீனாவை நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. சீனா கட்டும் அணையால் நமது பழங்குடியினர் மற்றும் நமது வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது. தண்ணீர் வெடிகுண்டாக இந்த அணையை சீனா பயன்படுத்தலாம். இந்த அணை கட்டுமான பணியை சீனா தொடங்கியிருக்கலாம். அல்லது விரைவில் தொடங்கலாம். ஆனால், அவர்கள் இது தொடர்பான எந்த தகவலையும் பகிர மாட்டார்கள். அணை கட்டும் பணி முடிந்தால், நமது சியாங் மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்" என்று அச்சம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications