ஈராக்: ஐஸ் கிரீம் பார்லரில் கார் குண்டு மூலம் தீவிரவாதிகள் தாக்குதல்... 13 பேர் பலி
ஈராக்கில் ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றில் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட கார் மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்: ஈராக்கில் ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றில் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட கார் மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்குமான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஈராக் ராணுவமும் அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.

ராணுவ தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். ஏராளமானோர் கை கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றின் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் திடீரென வெடித்து சிதறியதில் ஐஸ் க்ரீம் பார்லரில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள அவர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் இன்று இரவு குழந்தைகள், குடும்பங்கள் கூடும் ஐஸ் க்ரீம் பார்லரை குறி வைத்துள்ளனர். நாங்கள் ஈராக்குக்கு எதிரானவர்கள் என தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே ஈராக்கின் கராடா மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications