பிரேசிலில் சுரங்கக் கழிவுகள் நிரப்பப்பட்டிருந்த அணை உடைந்து விபத்து- 17 பேர் பலி, 50 பேர் காயம்
பிரேசில்லா: பிரேசில் நாட்டில் சுரங்கக் கழிவுகள் நிரப்பப்பட்ட பகுதியில் அணை உடைந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள மரியானாவில் தனியாருக்குச் சொந்தமான சிறிய அணை ஒன்று உள்ளது. அங்கு சுரங்கக் கழிவுகள் நிரப்பப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சுரங்கக் கழிவுகள் நிரப்பப்பட்ட பகுதியில் திடீரென அணை உடைந்தது. இதனால் மரியானா பகுதி குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கி 17 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை ஹெலிகாப்டரில் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் சுமார் 400க்கும் அதிகமான மக்கள் வசித்து வந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.