வேலையின்மை.. ஊழல்.. ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 34 பேர் பலி, 1500 பேர் காயம்
Recommended Video
பாக்தாத்: ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் பேராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டம் நடத்தியவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மூன்று நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் தற்போது வரை 34 பேர் கொல்லப்பட்டனர். 1518 பேர் காயம் அடைந்துள்ளனர்.
வேலையின்மை, மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் கிடைக்காதது, பொருளாதார மந்த நிலை, தலை விரித்தாடும் ஊழல் போன்ற பிரச்சனைகளால் எண்ணெய் வளம் மிக்க ஈரான் பாதிக்கப்பட்டுள்ளது.
இதானல் ஆளும் அரக்கு எதிராக கடும் கோபம் அடைந்த மக்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக செவ்வாய்கிழமை பேரணி நடத்தினர்

பாக்தாத்தில் வன்முறை
பாக்தாத்தில் உள்ள வரலாற்று சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வன்முறை வெடித்தது.

கடும் மோதல்
இந்த பேரணியில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்ட முயன்றனர். ஆனால் அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

ஊரடங்கு உத்தரவு
இதில் போராட்டக்காரர்கள் 31 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 3 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 1518 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பாக்தாத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதேபோல் மற்ற நகரங்களில் போராட்டம் நடக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து போராட்டத்தை தணிக்க பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

சாலைகளில் தடுப்புகள்
பாக்தாத்தின் பிரதான வீதிகளில் இராணுவ வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் வியாழக்கிழமை காலை செல்லவில்லை. பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன. முட்கம்பிகளால் சாலை பக்கவாட்டுகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் மக்களின் இந்த போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் அப்துல் மஹ்திக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications