"இந்தியர்களை மொத்தமாக வெளியேற்ற வேண்டும்!" ஆஸ்திரேலியாவில் வெறுப்பு பேரணி! முடங்கிய முக்கிய நகரங்கள்
கான்பெர்ரா: இந்தியர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருகிறார்கள். அதேநேரம் இந்தியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரமும் பல நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படித் தான் முழுக்க முழுக்க வெறுப்பை விதைக்கும் ஒரு பேரணி ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சில நாடுகளில் இந்தியர்கள் இன ரீதியான பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் இனவெறி தாக்குதல்களும் நடக்கிறது. சமீப காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஆஸ்திரேலியா போராட்டம்
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் அப்படித் தான் குடியேற்றத்தைக் கண்டித்து மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை முழக்கமாக வைத்து நடந்த இந்தப் பேரணியில் இந்திய புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவே பல்வேறு வாசகங்கள் இடம்பெற்று இருந்தது. "மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா" என்ற பெயரில் பேரணி நடந்தது. இதில் ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 3% மட்டுமே உள்ள இந்திய வம்சாவளியினர் மீது வன்மத்தைக் கக்கும் வகையிலான வாசங்கள் இடம்பெற்று இருந்தது.
இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பேரணி
இது குறித்து வழங்கப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தில், "100 ஆண்டுகளில் கிரேக்கர்களும் இத்தாலியர்களும் வந்ததை விடக் கடந்த 5 ஆண்டுகளில் அதிக இந்தியர்கள் வந்துவிட்டனர். ஒரு நாட்டில் இருந்து மட்டுமே இத்தனை பேர் வந்துள்ளனர் என்றால் மற்ற நாடுகளை நினைத்துப் பாருங்கள்.. குடியேற்றம் என்பது கலாச்சார ரீதியாகப் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது சிறிய கலாச்சார மாற்றம் அல்ல. இது அப்பட்டமான மாற்றம். பன்னாட்டு நிதியால் சுரண்டப்படும் பொருளாதார மண்டலமாக ஆஸ்திரேலியாவை மாற விட மாட்டோம்" என்றார்.
மிக பெரிய பேரணி
இந்தப் பேரணிகளில் இந்தியர்கள் மீது வன்மத்தைக் கக்கும் வகையிலான போஸ்ட்களை பரவலாகப் பார்க்க முடிந்தது. அந்நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு டேட்டாவின்படி, 2013 முதல் 2023 வரை இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி, சுமார் 8.45 லட்சமாக உயர்ந்துள்ளதாம். குடியேற்றத்தைத் தடுக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று அவர்கள் சாடியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், கான்பெர்ரா என பல முக்கிய நகரங்களில் மிகப் பெரிய பேரணிகள் நடைபெற்றன. சிட்னியில் நடந்த பேரணியில் 5,000 முதல் 8,000 பேர் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியத் தேசியக் கொடிகளைப் போர்த்தி போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சிட்னி முழுவதும் பாதுகாப்பிற்குப் பல நூறு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சிட்னியில் எந்தவொரு மோதலும் இல்லாமல் அமைதியாக முடிந்துவிட்டது.
மரணம் நிச்சயமாம்
சிட்னி மட்டுமின்றி மெல்போர்னிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கெல்லாம் மோதல் ஏற்பட்டது. "நாம் குடியேற்றத்தை நிறுத்தவில்லை என்றால், நமது மரணம் நிச்சயம்" என்றெல்லாம் இனவெறி கருத்துகளைச் சொல்லி போராட்டங்கள் நடைபெற்றன. மெல்போர்னில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதில் மெல்போர்னில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.
கண்டித்த ஆஸ்திரேலிய அரசு
அதேபோல ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ராவில் போராட்டம் நடந்தது. கான்பெர்ராவில் நாடாளுமன்ற மாளிகையை நோக்கிய நடந்த பேரணியில் பல நூறு பேர் கூடினர். மேலும், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பிராந்தியங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேநேரம் ஆஸ்திரேலிய அரசு இந்த ஆர்ப்பாட்டத்தைக் கடுமை கண்டித்துள்ளது.
மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா பேரணியை கண்டிப்பதாகவும் இது சமூக நல்லிணக்கத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாகத் தொழிலாளர் துறை அமைச்சர் முர்ரே வாட் ஸ்கை தெரிவித்துள்ளது. அதேபோல இந்தப் பேரணி சமூக ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் முயற்சி என்றும் ஆஸ்திரேலியாவில் அதற்கு இடமில்லை என்றும் உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications