தஞ்சம் கோரும் நடேசன் குடும்பம் இலங்கை அகதிகள் இல்லை.. ஆஸி. அமைச்சர் பீட்டர் அறிவிப்பு
கேன்பரா:ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் தமிழ் குடும்பமான நடேசன் குடும்பம் அகதிகள் கிடையாது என்று ஆஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டில் படகு வழியாக ஆஸ்திரேலிய சென்ற நடேசலிங்கமும், 2013 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குயின்லாந்த்தில் உள்ள பிலோயலா என்ற சிறுநகரில் கடந்த 4ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு கோபிகா, தருணிக்கா என்ற 2 குழந்தைகள் உள்ளன.

இந் நிலையில், கடந்த மார்ச் 2018ம் ஆண்டில் பிரியாவின் இணைப்பு விசா காலாவதியாகியதாக பிரியா- நடேசலிங்கம் என்ற இணையரின் வீட்டிற்கு சென்ற ஆஸ்திரேலிய எல்லைப்படை, அவர்களை கைது செய்தது. அதைத் தொடர்ந்து, பிரியா மற்றும் நடேசலிங்கத்துடன் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
அதை பிலோயலா நகரில் வசித்து வந்த ஆஸ்திரேலியர்கள் எதிர்த்தனர். போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியதன் எதிரொலியாக அவர்கள் நாடுகடத்தப்படுவதிலிருந்து தற்காலிகமாக மீட்கப்பட்டனர்.
இருப்பினும், அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த ஆஸ்திரேலியா முடிவு எடுத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந் நிலையில், நாடுகடத்தும் முடிவை திரும்ப பெற முடியாது என்று ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடேசன் குடும்பம் நீதிமன்றத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் அனைத்திலுமே அவர்கள் அகதிகள் இல்லை என அறியப்பட்டது என்று கூறியுள்ளார்.
காணாமல் போதல் சம்பவங்கள் இன்றும் நிகழ்கின்றன. தமிழ் மக்களுக்கு எதிராக சித்ரவதை நடக்கும் சூழலில், தமிழர்கள் எவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று தமிழ் அகதிகள் கவுன்சலின் பிரதிநிதி அரண் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 2018ம் ஆண்டு இறுதியில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை ஆஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்திருந்தது. அதே சமயம், பிப்ரவரி 1 வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என்று தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜான் மிடில்டோன் உத்தரவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications