உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு தள்ளப்பட்டு ஓராண்டாகப் போகிறது: அஞ்சலி செலுத்தும் ஆஸி.
மெல்போர்ன்: உக்ரைனில் பக் ஏவுகணை வீசி தாக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினத்தை அணுசரிக்கக ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்தில் இருந்து 298 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் உடல் சிதறி பலியாகினர். விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து வரும் ஜூலை 17ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகின்றது. நினைவு தினத்தை அணுசரிக்க ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. விமானம் தாக்கப்பட்ட சம்பவ விசாரணையில் ஆஸ்திரேலியா ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறுகையில்,
ஜூலை 17ம் தேதி கான்பெர்ராவில் நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தப்படும். எம்.ஹெச்.17 விபத்தில் பலியானவர்களுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்படும். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அதில் இருந்தவர்களுக்காக ஆஸ்திரேலிய மக்கள் வருத்தப்பட்டனர்.
ஜூலை 17ம் தேதி ஆஸ்திரேலியாவில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும் நாடாளுமன்ற பூங்காவில் விமானத்தில் பயணம் செய்து இறந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பலகை வைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications