புகலிடம் தேடி வரும் அகதிகளை ஏற்றுகொள்ளத் தயார்... ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
சிட்னி : சிரியா நாட்டைச் சேர்ந்த 12 ஆயிரம் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் அறிவித்துள்ளார்.
சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் எஞ்சியுள்ள வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள கொபானி நகரில் உள்நாட்டுப் போருக்கு பயந்து, உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் கடந்த ஆண்டு முதல் துருக்கிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் படகுகள் மூலமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இப்போதும் அகதிகள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிரியாவில் இருந்தும் ஈராக் நாட்டில் இருந்தும் வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.
சிரியா நாட்டில் இருந்து கிரேக்க நாட்டுக்கு அகதியாக சென்ற சிறுவன் அய்லான், கடலில் மூழ்கி பலியாகி கடற்கரையில் பிணமாக கிடந்த காட்சி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டில் மேலும் 12 ஆயிரம் சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இன்று அறிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து வெளியேறி இதர நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள சுமார் இரண்டரை லட்சம் அகதிகளின் நல்வாழ்வுக்கான நிதியாக 44 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சிரியாவில் இருந்து வெளியேறும் 13 ஆயிரத்து 750 அகதிகளுக்கு ஒதுக்கீட்டு முறையில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications