இரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துகளிலும் 4 பேரை பறிகொடுத்த ஆஸி. குடும்பம்!
சிட்னி: இந்த ஆஸ்திரேலியக் குடும்பத்தின் சோகத்தை எழுத்தில் சொல்ல முடியாது.. அடுத்தடுத்து இரண்டு விமான விபத்துக்களில், அதுவும் ஒரே விமான நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்த 4 இழந்து பரிதவித்துக் கொண்டுள்ளது இந்தக் குடும்பம்.
ஐரோப்பாவில் ஒரு மாத விடுமுறையைக் கொண்டாடி விட்டு மேரி மற்றும் ஆல்பர்ட் ரிஸ்க் ஆகியோர் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம் மூலம் மெல்போர்ன் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால் வழியிலேயே இந்த விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டது.
மேரியின் தாயார் வழிச் சொந்தமான ரோட்னி மற்றும் அவரது மனைவி மேரி பர்ரோஸ், ஆகியோர் கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்வதற்காக மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானத்தில் பயணித்தபோது அது மாயமாகிப் போனது. அந்த சோகத்திலிருந்தே இன்னும் மீளாமல் உள்ள மேரியின் குடும்பம் தற்போது மேரியையும், அவரது கணவரையும் விபத்தில் இழந்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று மேரி குடும்பத்தினர் சோகத்துடன் கூறுகிறார்கள். உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உயிரிழந்த 295 பேரில் ஆஸ்திரேலியர்கள் 28 பேர் ஆவர்.