இந்தியர்களுக்கு சிக்கல்! ஆஸ்திரேலியா செல்ல விசாவுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு! புதிய ரூல்ஸ் என்ன
கான்பெரா: ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அரசு இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
பொதுவாகவே மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெற தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்று படிப்பார்கள். பல வெளிநாட்டு மாணவர்கள் நமது நாட்டிற்கும் வருகிறார்கள். நமது நாட்டு மாணவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்.

இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் படிப்பிற்காக விசா பெறுவதை ஆஸ்திரேலியா கடுமையானதாக மாற்றி இருக்கிறது.
என்ன மாற்றம்: பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் மாணவர் விசாவில் செல்லும் நபர்கள் குறிப்பிட்ட தொகையை அவர்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும். இதற்கான ஆதாரத்தைக் காட்டினால் மட்டுமே மாணவர் விசா வழங்கப்படும். அந்த தொகையைத் தான் இப்போது ஆஸ்திரேலியா உயர்த்தி இருக்கிறது.
புதிய விதிமுறைகள் படி தேசிய குறைந்தபட்ச ஊதியத்தில் சுமார் 75%ஐ ஆஸ்திரேலியாவில் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். அதாவது வெளிநாட்டு மாணவர்கள் குறைந்தபட்சம் $29,710 (இந்திய மதிப்பில் ரூ.16.29 லட்சம்) டாலரை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு மாணவர் விசா கிடைக்கும்.. இந்த விதிமுறைகள் நாளை மே 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
என்ன காரணம்: ஆஸ்திரேலியாவில் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் படிக்கும் போது மாணவர்கள் தங்கள் அடிப்படை வாழ்க்கைச் செலவுகள் பார்த்துக் கொள்ள இந்தளவுக்குப் பணம் தேவைப்படும் என்றும் இதன் காரணமாகவே சேமிப்பு தொகையை உயர்த்தி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான இந்த சேமிப்பு தொகை கடந்த ஏழு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்படுகிறது. முதலில் கடந்த அக். மாதம் இந்த சேமிப்பு தொகை என்பது 21,041 ஆஸ்திரேலிய டாலரில் (₹11,54,361) இல் இருந்து $24,505 ஆஸ்திரேலிய டாலராக (₹13,44,405) உயர்த்தப்பட்டது. இப்போது ஏழு மாதங்களில் அது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு: கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வீடுகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல வித பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய அரசு இந்த விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவர்கள் படிக்கும் காலத்தைத் தாண்டி சட்ட விரோதமாகத் தங்குவதையும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடவடிக்கைகள்: ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கான தேர்வை மாற்றியுள்ளனர். அங்கு மாணவர்கள் படிப்பதற்காக மட்டுமே பிரதானமாக வருகிறார்கள் என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். மேலும், படித்து முடித்த பிறகு அங்கேயே தங்கிப் படிப்பிற்கு ஏற்ற வேலை தேடிக்கொள்ள வழங்கப்படும் கால அவகாசம் இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதர கட்டுப்பாடுகள்: ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 5.5 மார்க் பெற்று இருக்க வேண்டும் என்ற விதியையும் கொண்டு வந்துள்ளனர். படிக்கும் போது பார்ட் டைமில் வேலை செய்யலாம் என்ற போதிலும் அது 15 நாட்களுக்கு 48 மணி நேரம் என்ற கணக்கிற்கு மிகாமல் இருக்கக்கூடாது என்ற ரூல்ஸையும் கொண்டு வந்தார்கள்.
மேலும், பொறியியல் பட்டதாரிகளை 18 மாதங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கி, வேலை செய்ய அல்லது படிக்க அனுமதித்த Skilled-Recognised Graduate visaக்களிலும் கடந்தாண்டு டிச. முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து படிக்கும் போது முதல் 6 மாதங்களில் வேறு ஒரு படிப்பில் சேரவும் கடந்தாண்டு செப். மாதம் தடை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications