"ட்விஸ்ட்!" ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்? இறங்கி வரும் இயக்குநர் குழு! என்னாச்சு
வாஷிங்டன்: சாட்ஜிபிடி சிஇஓ பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் நேற்று தான் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், இதில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் இப்போது நடக்கிறது.
இந்த டெக் உலகில் சமீப காலத்தில் வந்த மிக முக்கியமான ஒன்று சாட் ஜிபிடி.. இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் இயங்கும் ஒன்றாகும். சாட் ஜிபிடி முதல் ஏஐ கருவி இல்லை என்ற போதிலும், ஏஐ மூலம் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை உலகிற்குக் காட்டியது சாட் ஜிபிடி தான்.

ஏஐ துறை இந்த சாட் ஜிபிடியின் வெற்றிக்குப் பிறகு மிகப் பெரிய பாய்ச்சலை அடைந்துள்ளது என்றால் அதில் சந்தேகமே இல்லை. இந்த சாட்ஜிபிடி நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தவர் சாம் ஆல்ட்மேன். ஓபன் ஏஐ நிறுவனத்தின் முகமாக இருந்த சாம் ஆல்ட்மேன் ஏஐ குறித்துப் பல நாடுகளில் கூட்டங்களிலும் கலந்து கொண்டு வந்தார்.
சாம் ஆல்ட்மேன்: இதற்கிடையே சாம் ஆல்ட்மேன் நேர்மையாக இல்லை என்றும் அவர் அளிக்கும் தகவல்கள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றும் கூறி சாம் ஆல்ட்மேனை ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு நேற்று டிஸ்மிஸ் செய்தது. இந்த முடிவு நேற்று உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் மிகப் பெரிய ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அதாவது மீண்டும் சாம் ஆல்ட்மேனை ஓபன் ஏஐ நிறுவனத்தில் கொண்டு வர இயக்குநர் குழு அவருடன் ரகசிய பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓவாக நியமிப்பது குறித்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளரான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்தில் பல பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. மேலும், பிங் தொடங்கி பலவற்றில் மைக்ரோசாப்ட் சாட்ஜிபிடியை இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று சாம் ஆல்ட்மேன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக மீரா முராட்டி சிஇஓவாக நியமிக்கப்பட்டார். சாட் ஜிபிடி நிறுவனத்திற்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என்றும் மீரா முராட்டியுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா நேற்று கூறினார். இருப்பினும், அவர் ஓபன் ஏஐ இயக்குநர் முடிவால் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் சாம் ஆல்ட்மேனுடன் நேரடியாக இது குறித்துப் பேசி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: அதேபோல ஓபன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்யும் பல ஊழியர்களும் சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓவாக நியமிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என எச்சரித்துள்ளனர். ஓபன் ஏஐ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், சாம் ஆல்ட்மேன் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஓபன் ஏஐ முன்னாள் தலைவர் கிரெக் ப்ரோக்மேனும் ஆல்ட்மேனுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.
நேற்று சாம் ஆல்ட்மேன் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வந்த உடன் ஓபன் ஏஐ இணை நிறுவனரான கிரெக் ப்ரோக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. சாம் ஆல்ட்மேனுக்கும் ஓபன் ஏஐ இயக்குநர் குழுவுக்கும் இடையே ஏஐ பாதுகாப்பு, ஏஐ வளர்ச்சியின் வேகம் மற்றும் ஏஐ கருவிகளை வணிகமயமாக்குவது என பல்வேறு விவகாரங்களிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே சாம் ஆல்ட்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications