Balakot: லேடனை போட்டுத் தள்ளிய அபோதாபாத் அருகேதான்.. இன்று நின்று விளையாடியது இந்தியா!
Recommended Video
பாலகோட்: அல் கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட அபோதபாத் நகருக்கு அருகில் உள்ளது பாலகோட். இந்த இடத்தைக் குறி வைத்துத்தான் இந்திய விமானப்படை இன்று அதிகாலையில் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
1971ம் ஆண்டு போருக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா, இன்று பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்கு செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்து உலகையே அதிர வைத்துள்ளது.
மொத்தம் 4 இடங்களைக் குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அதில் ஒன்றுதான் பாலகோட். இது மிக முக்கியமான தீவிரவாத தலமாக விளங்கி வந்தது. அங்குதான் இன்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியா.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மான்சேரா மாவட்டத்துக்குட்பட்ட சிறிய நகரம்தான் பாலகோட். இது கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெ ரிய காஷ்மீர் நிலநடுக்கத்தில் சிக்கி சீர்குலைந்த நகரமாகும். சமூதி அரசு கொடுத்த மிகப் பெரிய நிதியுதவியின் கீழ் இந்த நகரம் மீண்டும் கட்டியமைக்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பாலகோட் பகுதியில் பெருமளவில் இந்துக்களும், சீக்கியர்களும் வசித்து வந்தனர். பிரிவினையைத் தொடர்ந்து இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.
பாலகோட்டுக்கு அருகில் உள்ள ஒரு முக்கியமான நகரம் அபோதாபாத். இங்குதான் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பல காலம் பதுங்கியிருந்தார். பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் பதுங்கியிருந்த லேடனை, முஷாரப் ஆட்சிக்காலத்தில், அமெரிக்க கடற்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி காலி செய்தது நினைவிருக்கலாம். இன்று அபோபோதாத் அருகில் வரை இந்தியப் படையினர் புகுந்து வெளுத்திருப்பதால் பாகிஸ்தானே ஆடிப் போயுள்ளது. நிச்சயம் இதை பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை.