போதைப் பொருள் கடத்தல்: இந்தோனேசியாவில் தமிழர் உள்பட 2 பேருக்கு மரண தண்டனை உறுதி
பாலி: பொதுமன்னிப்பு அளிக்க மறுத்த இந்தோனேசிய அதிபரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று இந்தோனேசிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான தமிழர் உள்பட 2 பேருக்கு மரண தண்டனை உறுதியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள டென்பசாரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 1 பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேர் பாலியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலும், ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பவிருந்த விமானத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர்கள் 8.3 கிலோ ஹெராயினை இந்தோனேசியாவில் இருந்து கடத்த முயன்று போலீசில் சிக்கினர்.

இந்த வழக்கில் போதைப் பொருளை கடத்த ஆட்களை பணியமர்த்திய ஆஸ்திரேலியர்களான ஆன்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாறன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்ற இந்தோனேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்ற 7 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சானும், சுகுமாறனும் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது பலனில்லை. இதையடுத்து அவர்கள் பொது மன்னிப்பு கோரி இந்தோனேசிய அதிபர் விடோடோவுக்கு மனு அளித்தனர். அவர்களின் கருணை மனுக்களை விடோடோ நிராகரித்தார். அதிபரின் முடிவை எதிர்த்து அவர்கள் ஜகர்தாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அதிபரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
அந்த இருவருக்கும் இந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான சுகுமாறன் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்.












Click it and Unblock the Notifications