"கொலைக் களமாகும் வங்கதேசம்".. 24 மணி நேரத்தில் 2 இந்துக்கள் படுகொலை
டாக்கா: வங்கதேசம் நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. முக்கியமாக அங்குள்ள இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்துக்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் ஏற்கனவே 5 இந்துக்கள் அங்கு கொலை செய்யப்பட்டிந்தனர். அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் நாட்டில் கடந்த சில வருடங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. போராட்டம், வன்முறை, ஆட்சி கவிழ்ப்பு, அதிபர் மாற்றம் என்று அடுத்தடுத்த பிரச்சனைகளால் அங்கு தற்போது வரை இயல்பு நிலை திரும்பவில்லை. அதன் தொடர்ச்சியாக அங்கு சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசம் இந்துக்கள் மீது தாக்குதல்
வங்கதேசம் மாணவர் அமைப்பின் தலைவர் ஒஸ்மான் ஹாதி கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதனால் ஒஸ்மானின் ஆதரவாளர்கள் கோபமாகி அங்குள்ள சிறுபான்மை மக்களான இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த 2022 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வங்கதேசத்தில் 1.3 கோடி இந்துக்கள் வசிக்கிறார்கள்.
கடந்த 2025 டிசம்பர் மாதம் முதல் வங்கதேசத்தில் 5 இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். திபு சந்திரதாஸ், அமிரித் முந்தால், பஜேந்திர பிஸ்வாஸ் உள்ளிட்ட இளைஞர்களை மாணவர் அமைப்பினர் கொலை செய்தனர். டிசம்பர் 31 ஆம் தேதி இரவு கோகன் தாஸ் என்கிற தொழிலதிபரை தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.
24 மணி நேரத்தில் 2 இந்துக்கள்
மோனி சக்ரபோர்த்தி என்கிற இளைஞர் வங்கதேசம் மாநிலம், நர்சிங்டி மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது, சில மர்ம நபர்கள் மோனியை சுற்றி வளைத்துள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் அவர்கள், மோனியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல ஜஸ்ஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரானா பிரதாப். ஐஸ் தொழிற்சாலை வைத்துள்ள ரானா, பத்திரிகை ஒன்றில் பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று அவரை மர்ம நபர்கள் தலை பகுதியில் சுட்டு கொலை செய்தனர். மேலும் அவரின் தொண்டை பகுதியை கத்தியால் அறுத்துள்ளனர்.
தொடரும் வன்முறை
பிரதாப் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடலில் இருந்து 7 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பிரதாப்பிடம் வாக்குவாதம் செய்து, பிறகு அவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த சனிக்கிழமை ஜெனியத் மாவட்டத்தில் இந்து பெண் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications