வங்க தேசத்தில் இருந்து தப்பியோடிய ஷேக் ஹசீனா.. இந்தியா வழியாக லண்டன் செல்கிறார்? பரபர தகவல்
டாக்கா: நாடு முழுவதும் தனது அரசுக்கு எதிராக வன்முறை வெடித்ததை அடுத்து, வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, தனி ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்தியாவிற்குள் அவரது ஹெலிகாப்டர் பயணிக்கும் நிலையில், லண்டன் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. நிலைமை கையை மீறி போனதால் தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அரண்மனையை விட்டு ரகசியமாக வெளியேறினார். அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் புறப்பட்ட ஷேக் ஹசீனா, இந்தியா நோக்கி வருகை தந்தார்.

அகர்தலாவில் ஷேக் ஹசீனா: ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் இந்தியாவின் ஜார்க்கண்ட் வழியாக செல்வதை ரேடார்கள் மூலமாக உறுதி செய்தனர். இந்தியாவில் தரையிறங்கும் ஷேக் ஹசீனா, இங்கிருந்து விமானம் மூலமாக லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிபுராவின் அகர்தலாவில் இருந்து ஷேக் ஹசீனா லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
லண்டன் செல்கிறார்?: தனது சகோதரியுடன் டாக்காவில் இருந்து புறப்பட்ட ஷேக் ஹசீனாவிற்கு இந்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு கவலைகள் இருந்தாலும் இந்திய அதிகாரிகள் பிறகு அனுமதி கொடுத்து அவரது பயணத்தை ஒருங்கிணைத்ததாகவும் சொல்லபடுகிறது. ஷேக் ஹசீனாவுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் இருக்கலாம் என நம்ப படுகிறது.
வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?: நமது அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்தானது.
இந்த நிலையில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் மாணவர்கள்-போலீசார் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை களமாக மாறியது.
இந்த வன்முறையில் சுமார் 200 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் சூழலை சமாளிக்க ராணுவம் களம் இறக்கப்பட்டது. இதற்கிடையே, இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக குறைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அங்கு வன்முறை படிப்படியாக குறைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியது. இதனிடையே, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டதை கண்டித்து மீண்டும் ஒரு போராட்டம் வெடித்தது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போரட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதையடுத்து மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
நிலைமை கையை மீறி போனதால் தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அரண்மனையை விட்டு ரகசியமாக வெளியேறினார். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், வங்க தேச ராணுவ தளபதி வாக்கர் நாட்டுமக்களிடையே உரையாற்றினார். அவர் கூறுகையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது மாணவர்கள், மக்கள் என அனைவரும் அமைதி காக்க வேண்டும். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைய ராணுவம் துணை நிற்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications