வங்கதேச அரசு பண்ற வேலையை பாருங்க.. கிளர்ச்சி படைக்கு வரி விலக்கு!
டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 'ஜூலை வீரர்கள்' க்கான வருமானத்தில் 5.25 லட்சம் வரை தனிநபர் வரி விலக்கு அளித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் காயமடைந்த போர் வீரர்களுக்கும் இதேபோன்ற வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது.
'ஜூலை வீரர்கள்'
கடந்த பிப்ரவரி மாதம், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 2024 ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்க நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 1,401 'ஜூலை வீரர்களின்' பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில், ஜூலை போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வங்கதேசத்தின் நிதி ஆலோசகர் சலேவுதீன் அகமது திங்களன்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இந்த வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,500 பேர் இறந்ததாகக் கூறப்படும் பாரிய கிளர்ச்சியில் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு அரசாங்கம் உரிய கவனிப்பு அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், இந்த வரி விலக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து Dhaka Tribune ஊடகத்தில் வெளியான செய்தியில், "2026-27 நிதியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.5,25,000 வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் 'ஜூலை வீரர்கள்' என்ற புதிய தனிநபர் வருமான வரிப் பிரிவை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1971 போரில் காயமடைந்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான வரிவிலக்கு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 5.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம், யூனுஸ் அரசாங்கம் 2024 ஆகஸ்ட் மாதம் அவாமி லீக் அரசாங்கத்தை பதவி விலகச் செய்த போராட்டங்களில் பங்கேற்றதற்காக 1,401 நபர்களை 'ஜூலை வீரர்கள்' என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது என்று Dhaka Tribune செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூலை போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி
ஜூலை கிளர்ச்சியில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களின் மறுவாழ்வு மற்றும் நலனுக்காக பட்ஜெட்டில் 405.20 கோடி ஒதுக்கப்பட்டது.
வங்கதேசத்தின் நிதி ஆலோசகர் தனது பட்ஜெட் உரையில், ஜூலை போராட்டங்களில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த குடும்பங்களுக்கு விரைவில் நிதி உதவித்தொகை வழங்கும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து Business Standard ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், "காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை மேற்பார்வையிடவும், போராட்டத்தின் மரபுகளைப் பாதுகாக்கவும் 'ஜூலை மாஸ் எழுச்சி இயக்குநரகம்' என்ற அமைப்பை யூனுஸ் அரசாங்கம் அமைத்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டு காயம் அடைந்தவர்களை கௌரவிக்கும் விதமாக வங்கதேச அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications