ஹிந்துக்களுக்கு தகுந்த பாதுகாப்பு: வங்கதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
டாக்கா: வங்கதேசத்தில் வசித்து வரும் ஹிந்து சிறுபான்மை சமூகத்தினருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரும்படி, அந்நாட்டு அரசுக்கு டாக்கா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலின்போதும், அதனைத் தொடர்ந்தும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது டாக்கா உயர் நீதிமன்றம். விசாரணையின் முடிவில், வங்க தேசத்தில் உள்ள ஹிந்து மதத்தினருக்குத் தேவையான பாதுகாப்பை செய்து தரும்படி அந்நாட்டு அரசுக்கு அந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஹிந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலின்போது ஏற்பட்ட சேத விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
வன்முறைகளின்போது ஹிந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பது குறித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என்பது குறித்தும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு வங்கதேச அரசின் உள்துறைச் செயலாளர், ஐ.ஜி. மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த காவல்துறை ஆணையர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications