வங்கதேசம் இந்து தொழிலதிபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
டாக்கா: வங்கதேசம் நாட்டில் சமீப காலமாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்துக்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அங்கு மற்றொரு இந்து மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. பணி முடிந்து வீடு திரும்பிய தொழிலதிபரை ஒரு கும்பல் கடுமையான ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நம் அண்டை நாடான வங்கதேசம் நாட்டில் கடந்த சில வருடங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கடந்த 2024 வருடம் அந்த நாட்டில் ஏற்பட்ட வன்முறை, அந்த நாட்டின் அதிபராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவில் தலைமறைவானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதுவரை அங்கு முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்துக்கள் மீது தாக்குதல்
போராட்டங்கள், வன்முறை, சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் என்று வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு கடந்த மாதம் மாணவர் அமைப்பின் தலைவர் ஒஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டார். இது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் அங்குள்ள சிறுபான்மையினரான இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
2022 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வங்கதேசத்தில் 1.3 கோடி இந்துக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் 5 இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். திபு சந்திரதாஸ், அமிரித் முந்தால், பஜேந்திர பிஸ்வாஸ் 3 இந்து இளைஞர்களை மாணவர் அமைப்பினர் கொலை செய்தனர்.
தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல்
இது வங்கதேசத்தில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. வங்கதேச மாநிலம், ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகன் தாஸ் (50). இவர் அங்கு சொந்தமாக மருந்துக் கடை மற்றும் மொபைல் பேக்கிங் சேவை தொடர்பான தொழில் செய்து வந்தார்.
கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு தாஸ் ஆட்டோ மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வழியில் ஒரு கும்பல் அவரை மறித்து, கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். விடாமல் விரட்டி தாக்கிய அந்த கும்பல், தாஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீப்பற்றியுள்ளனர். தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக தாஸ் அருகில் உள்ள குளத்தில் குதித்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாஸ் டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உடலின் பல இடங்களில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தலைப் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக தாஸின் வயிற்று பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் உடல்நலம் மோசமடைந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications