கத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு!
டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானி பாஸ்போர்ட் இல்லாமல் தோஹா விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான், சவூதி அரேபியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அவர் பின்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.

அவரை அழைத்து வருவதற்காக வங்கதேச அரசுக்கு சொந்தமான பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நேற்றுமுன்தினம் இரவு பின்லாந்து சென்றது. அந்த விமானம் கத்தாரிலுள்ள தோஹா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் விமானிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது வங்கதேச பிரதமரின் தனி விமானத்தை இயக்கிய ஃபஸல் மஹ்மூத் என்ற விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாதது தெரிய வந்தது. இதுதொடர்பாக, தோஹா விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரிகள் பிமான் ஏர்லைன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, வங்கதேசத்திலிருந்து தோஹா சென்ற மற்றொரு விமானத்தில் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், பிரதமர் ஷேக் ஹசீனாவின் பயணத்தில் தடை ஏற்படக்கூடாது என்பதற்காக வேறு ஒரு விமானியை பின்லாந்து நாட்டிற்கு பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அனுப்பியது. மேலும், தோஹா விமான நிலையத்தில் சிக்கிய விமானி ஃபஸல் மஹ்மூத் ஓட்டலில் தங்க வைங்கப்பட்டு பின்னர் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, விமானி ஃபஸல் மஹ்மூத்திடம் விசாரணை நடத்தப்படும் என்று வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸமான் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications