வங்கதேசத்தில் பூகம்பத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் போராட்டம் – முகமது யூனுஸ்க்கு டபுள் செக்
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட அரசியல் அசாதாரண நிலை இப்போதைக்கு சரியாவது போல் இல்லை. இடைக்கால ஆட்சிக்கு எதிராக ராணுவ தளபதியின் உத்தரவு, ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஆகியவற்றால் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.
வங்கதேசம் நாட்டுக்கு இது சோதனை காலம். கடந்த வருடம் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது அந்த நாட்டில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியது. ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவுக்குள் தங்குமளவுக்கு நிலைமை விபரீதமானது. இது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவு ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்னை காரணமாக முகமது யூனுஸ் என்பவர் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவி ஏற்றார். வங்கதேசத்தில் சில மாதங்கள் அமைதி திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் போராட்டம், பதற்றம் என்று அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அந்த நாட்டின் ராணுவ தளபதி வாகிர் உல் ஜமான் போட்ட ஒரு உத்தரவு தான் காரணம்.
இந்த வருட இறுதிக்குள் வங்காள தேசத்தில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வாகிர் உல் உத்தரவிட்டுள்ளார். அப்படி நடத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். அவரின் கருத்தை எதிர்க்கட்சிகளும் ஆமோதிக்க தொடங்கிவிட்டன. வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் ஹலிதா சியாவும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மறுபக்கம் அரசுக்கு எதிராக அந்த நாட்டில் அரசு ஊழியர்கள், பொது மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது இரட்டை தலைவலியாக முகமது யூனுஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனிடையே விதிகளை மீறி செயல்படும் அரசு ஊழியர்களை 14 நாட்களில், எந்த விசாரணையும் இல்லாமல் பணியில் இருந்து நீக்கும் அவசர சட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது வங்கதேச நாட்டில் பூகம்பத்தையே ஏற்படுத்திவிட்டது. அரசு ஊழியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனுடன் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு பதவியேற்றால் மட்டுமே வங்காள தேசத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்று வாகிர் உல் ஜமான் நம்புகிறார். ஆனால் முகமது யூனுஸ் தேர்தல் நடைபெற்றால் தனக்கான அதிகாரம் போய்விடும் என்று நினைக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே ஈகோ வெடித்துள்ளது.
"தேர்தலை அடுத்த வருடம் வரை தள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, நாட்டை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. நாட்டுக்கு எதிராக உள்ளேயும், வெளியேயும் சதி நடைபெறுகிறது. இது நமது வளர்ச்சி பாதையை தடை செய்து, நாட்டை மோசமான சூழ்நிலைக்கு தள்ளும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்." என்று யூனுஸ் கூறியுள்ளார்.
ஆனால் அவரின் கருத்தை பெரிதாக யாரும் ஏற்கவில்லை. ஆசிரியர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பணிகளை புறக்கணித்துள்ளனர். "ஆசிரியர்களின் கால வரையற்ற போராட்டத்துக்கு ஆதரவு, ராணுவ தளபதியின் நெருக்கடி ஆகியவற்றால் விரைவில் முகமது யூனுஸ் அரசு கவிழும்." என்று அந்த நாட்டின் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications