வங்கதேசத்தில் 13 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை: தீயாக பரவிய வீடியோ
டாக்கா: வங்கதேசத்தில் 13 வயது சிறுவனை சிலர் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்று அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை கண்டித்து அங்கு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வங்கதேச மாநிலம் சில்ஹெட் நகர் அருகே உள்ள குமாரகாவ்னில் காய்கறி விற்று வந்தவர் சமியுல் ஆலம் ரஜோன்(13). அவர் ரிக்ஷாவை திருட முயன்றதாகக் கூறி சிலர் சிறுவனைப் பிடித்து கட்டி வைத்து இரும்புக் கம்பியால் தாக்கினர். சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினார். மேலும் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினார், தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டார்.
அதற்கு அந்த நபர்கள் சிறுவனைப் பார்த்து கேலி செய்து சிரித்ததுடன் அவரை அடித்தே கொலை செய்தனர். இந்த சம்பவத்தை அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த பலர் ஆத்திரம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து டாக்காவில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொலையாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே சிறுவனின் உடல் சில்ஹெட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளி சம்பவம் நடந்த பிறகு சவுதி அரேபியாவுக்கு தப்பியோடிவிட்டார். பின்னர் அவர் சவுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதய நோயால் அவதிப்படும் தனது தந்தையால் தனியாக குடும்பத்தை நடத்த முடியவில்லை என்று சமியுல் காய்கறி விற்று உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரை இழந்து அவரது பெற்றோர் துயரத்தில் உள்ளனர். தங்கள் மகனின் கொலைக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.