காஸா விவகாரம்: இங்கிலாந்து பெண் அமைச்சர் வர்சி ராஜினாமா ஏன்?
லண்டன்: காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் விவகாரத்தில் இங்கிலாந்து அரசின் கொள்கையானது நாட்டு நலனுக்கு எதிராக இருக்கிறது என்று கூறியுள்ளார் ராஜினாமா செய்த பெண் அமைச்சர் ஷெய்தா வர்சி.
பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் 28 நாட்களாக கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. இதில் 1,900 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். சுமார் 2 லட்சம் பேர் அகதிகளாகினர்.
தற்போது அங்கு 72 மணி நேர யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் காஸா விவகாரத்தில் ஒருவித மவுனப் போக்கை கடைபிடித்து வந்தது இங்கிலாந்து அரசு.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் முதலாவது இஸ்லாமிய பெண் அமைச்சரான ஷெய்தா வர்சி நேற்று ராஜினாமா செய்தார். அவர் பிரதமர் கேமரூனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
காஸா பிரச்சனை குறித்த நமது அணுகுமுறையும் வெளிப்படும் வார்த்தைகளும் கவலைக்குரியதாக இருக்கிறது. இது இங்கிலாந்தின் தேச நலனுக்கும் எதிரானது. சர்வதேச தளத்தில் நமது நாட்டின் மரியாதையை சீர்குலைப்பதாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு பொறுப்பு வகிக்கிறேன் நான். காஸா பிரச்சனையில் நமது தற்போதைய நிலைப்பாடு நமது மரபுகளுக்கு எதிரானதாக இருக்கிறது. சர்வதேச நீதிநியாயங்களுக்கு ஆதரவு தரக்கூடிய நமது நிலைப்பாட்டுக்கும் எதிரானதாக இருக்கிறது.
இவ்வாறு வர்சி தமது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் கேமரூனோ, இஸ்ரேலுக்கு தம்மை பாதுகாத்துக் கொள்கிற உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் பொதுமக்கள் பலியாவதை ஏற்க முடியாது. இருதரப்பையும் நாம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications