நிலநடுக்கத்தில் புதையுண்டது காத்மண்டுவின் 19-ம் நூற்றாண்டு “தரகரா” கட்டிடம்! 50 பேர் கதி என்ன?
காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டிடத்தில் இருந்த 50 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7. 9 அலகுகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்தக் கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்தன. காத்மண்டுவின் அடையாளமாக இருந்த 19ஆம் நூற்றாண்டு பழமையான கட்டிடமான "தரகரா" என்ற 9 மாடிக் கட்டிடமும் முழுமையாக இடிந்து விழுந்தது.
இக்கட்டிடத்திற்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோரும் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாத்தலமான அக்கட்டிடத்தினை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டிடம் 61.88 மீட்டர் உயரமானது. இக்கட்டிடத்தின் 8வது மாடியின் பால்கனியிலிருந்து காத்மாண்டுவை ரசிக்க முடியும். 10 வருடமாக சுற்றுலாப்பயணிகளுக்காக இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் அதன் கட்டிடக் கலைக்காக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications