மாயமான சிங்கப்பூர் ‘அழகுராணி’யின் உடல் பாகிஸ்தான் ஓடையில் கண்டுபிடிப்பு: புரோக்கர் கைது
இஸ்லாமாபாத்: காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிங்கப்பூர் மாடல் அழகி கொலை செய்யப்பட்டு உடல் ஓடையில் வீசப்பட்டதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி 27 வயதான ஃபெஹ்மினா சவுத்ரி. சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தனது தாயாருக்காக சொத்து ஒன்றை வாங்குவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
சவுத்ரியின் தாயார் பாகிஸ்தானில் வசித்து வந்தபோதும், பாகிஸ்தான் பயணங்களில் எல்லாம் ஓட்டல்களில் தங்குவதேயே வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் சவுத்ரி. அந்தவகையில், தனது தாயாருக்கு தான் இஸ்லாமாபாத் வந்த செய்தியை செல்போனில் அழைத்து தெரிவித்துள்ளார் சவுத்ரி.
ஆனால், அதற்குப் பின் அவரது செல்போனை அவரது தாயார் தொடர்பு கொள்ள முயன்ற போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாக தெரிவித்ததாகவும், பின்னர் சிறிது நேரத்தில் சவுத்ரியில் செல்போனில் இருந்து அவர் கடத்தப் பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்ததாகவும் போலீசில் அவரது தாயார் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சவுத்ரிக்கு சொத்து வாங்கித் தருவதாக கூறிய புரோக்கரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், சவுத்ரியைக் கொலை செய்து, சடலத்தை அருகில் இருந்த ஓடையில் வீசியதை புரோக்கர் ஒத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஓடை கரையோரம் ஒதுங்கியிருந்த சவுத்ரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications