கோவாக்சின் ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல்.. பிரேசில் அதிபர் மீது தீவிரமடையும் விசாரணை.. பரபர பின்னணி
பிரேசிலியா: பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்சின் வாங்கியதில் சுமார் 316 மில்லியன் டாலர் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இதில் அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது வேகிசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி இல்லை.
பணக்கார நாடுகளால் மட்டும் தேவையான வேக்சின்கள் எளிதாகப் பெற முடிகிறது. ஆனால் மற்ற நாடுகள் முன்களப் பணியாளர்களுக்கு வேக்சின் செலுத்தக் கூட திணறி வருகின்றன.

வேக்சின் ஒப்பந்தம்
தடுப்பூசி பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பிரேசில் ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல்கட்டமாக நான்கு லட்சம் கோவாக்சின் டோஸ்கள் என மொத்தம் இரண்டு கோடி டோஸ்களை இறக்குமதி செய்ய 324 மில்லியன் டாலருக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், மிக அதிகமான தொகைக்குப் பிரேசில் கோவாக்சின் டோஸ்களை இறக்குமதி செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.

ஒப்பந்தம் ரத்து
முதலில் வழக்கமாக அனைத்து அரசுகளையும் போலவே எந்தவொரு முறைகேடும் இல்லை என்றே பிரேசில் மறுத்தது. ஏற்கனவே, கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் மக்களுக்கு அந்நாட்டு அரசின் மீது அதிருப்தி பல மடங்கு அதிகரித்தது. இதையடுத்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகப் பிரேசில் அறிவித்தது. இது பற்றி அந்நாட்டின் நாடாளுமன்ற குழு விசாரணையும் நடத்தியது.

அதிபர் ஜெய்ர் போல்சனாரோ
ஊழல் ஒழிப்பு என்பதையே ஒற்றை மந்திரமாக வைத்து ஆட்சியைப் பிடித்த ஜெய்ர் போல்சனாரோ ஆட்சியில், அதிலும் வேக்சின் வாங்கியதில், இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளதை அந்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜெய்ர் போல்சனாரோ மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினர். அந்நாட்டின் சட்டப்படி அதிபர் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் தேவை.

விசாரணைக்கு ஒப்புதல்
இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது விசாரணை நடத்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதிபர் மீதான ஊழல் புகார் குறித்து 90 நாட்களில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், கோவாக்சினை வாங்கியதில் எவ்வித முறைகேடும் இல்லை என்றே பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தொடர்ந்து கூறி வருகிறார்.

பாரத் பயோடெக்
அதேபோல பாரத் பயோடெக் நிறுவனமும் இதில் எந்தவொரு ஊழலும் இல்லை என மறுத்துள்ளது. அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றியே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதுவரை ஒரு பிரேசில் அரசிடம் இருந்து தடுப்பூசிக்காக எந்தவொரு நிதியையும் பெறவில்லை என்றும் மறுத்துள்ளது. பிரேசில் நாட்டில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications