பிரேசிலில் பெர்னான்டோ தீவு அடுத்த வாரம் திறப்பு.. தீவுக்கு வர வினோத தகுதியை வெளியிட்டது அரசு
பிரேசிலியா: கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற ஒரு விதிமுறையுடன் பிரேசிலில் ஒரு தீவு ஒன்றில் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகளவில் 2.50 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் 2ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 38 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை அங்கு 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

அலட்சியம்
முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை அலட்சியமாக கருதிய அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் அண்மையில் மீண்டார். அது போல் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்து அவரும் மீண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் பிரேசிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக எல்லைகள் மூடப்பட்டன.

5 மாதங்கள்
தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு தீவு ஒன்றையும் பிரேசில் அடுத்த வாரத்தில் திறக்க முடிவு செய்துள்ளது. பெர்னாண்டோ டி நோரோன்ஹா என்ற தீவு மிக அழகிய இடங்களை கொண்டுள்ளது. 21-க்கும் மேற்பட்ட எரிமலைகளும் அந்த தீவில் உள்ளன. 5 மாதங்களுக்கு பிறகு, இந்த தீவை திறப்பதாக பிரேசில் அரசு அறிவித்தது.

சான்றிதழ்
ஆனால் தற்போது ஒரு வினோத அறிவிப்பை அதிபர் ஜெயிர் போல்சனேரோ அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த வாரத்தில் திறக்கப்படவுள்ள தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுற்றுலா பயணிகள் கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு
இல்லையெனில் அவர்களது உடலில் கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சோதனை முடிவுகள் சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் கொரோனா பாதிக்காதோர் இந்த தீவுகளுக்கு வந்தால் அவர்களுக்கு தெரியாமல் ஒரு வேளை கொரோனா இருந்தால் அவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதே, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வந்தால் அதன் எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் இந்த முடிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications