பிரேசிலில் ஆட்சியை கவிழ்க்க சதி.. 'குட்டி டிரம்ப்' போல்சனாரோ.. குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
பிரேசிலியா: தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வியடைந்தார். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார். இது தொடர்பான குற்றச்சாட்டுகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜெய்ர் போல்சனாரோ குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்ர் போல்சனாரோ ஒரு வலதுசாரி. மட்டுமல்லாது டிரம்ப்பின் நெருங்கிய கூட்டாளியும் கூட. ஆனால் என்ன செய்வது 2022 தேர்தலில் மக்களை அவரை தோற்கடித்துவிட்டனர். அவருக்கு பதிலாக இடதுசாரி சிந்தனை கொண்ட லூலா டா சில்வாவை தேர்ந்தெடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத போல்சனாரோ டிரம்ப் மாதிரி தனது அடியாட்களை வைத்து அரசு அலுவலகங்களை சூறையாடுவது, லூலா டா சில்வாவை கொலை செய்ய முயற்சிப்பது என தேவையில்லாத வேலைகளை பார்த்துவிட்டார். நாடே கலவர பூமியாக மாறிவிடும், அதன் மூலம் ராணுவ புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றிவிட முடியும் என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ராணுவம் அவருக்கு கை கொடுக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரேசில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
வழக்கை மொத்தம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் 3 நீதிபதிகள் போல்சனாரோதான் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்னர். பெரும்பான்மை நீதிபதிகள் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளதால், போல்சனாரோ விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கான தண்டனை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நிச்சயம் 20-30 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என உள்ளூர் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச அளவில் இப்படியான ஆட்சிக்கவிழ்ப்பு சம்பவங்கள் தொடர்ந்து பல நாடுகளில் நடந்து வருகின்றன. பிரேசிலில் போல்சனாரோ வழக்குபோல அடுத்து, அமெரிக்காவில் டிரம்ப் மீதான வழக்கும், இஸ்ரேல் நெதன்யாகு மீதான வழக்கும் தீர்ப்புக்காக காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications