இந்தியாவின் MSME துறைக்கு அடித்த ஜாக்பாட்.. BRICS PAY சாத்தியமானால் நாமதான் டாப்!
டெல்லி: டிரம்ப் ஆடிக்கொண்டிருக்கும் வரி ஆட்டத்திற்கு மத்தியில் இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. 'பிரிக்ஸ் பே' (BRICS PAY) திட்டத்தை இந்தியா ஏற்றுக்கொண்டால் நம்முடைய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் சுமார் 11 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு MSMEs துறை வேலை வாய்ப்பை கொடுக்கிறது. இந்த துறையை மேலும் 'பூஸ்ட் அப்' செய்ய வேண்டும் எனில் BRICS PAY முக்கியம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் MSMEs துறை
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைதான் MSMEs துறைகள் என்று அழைக்கிறோம். இந்தியாவின் பொருளாதாரத்திற்கு MSMEs 30 சதவிகித அளவுக்கு பங்களிப்பு செய்கிறது. இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகம் வழங்கும் முதல் துறை வேளாண்தான். இரண்டாவதாக MSMEs இருக்கிறது. நம்முடைய நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் சுமார் 48% இந்த துறையிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் 6.3 கோடி MSME-க்கள் இயங்குகின்றன. இதன் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கும்.
பரிவர்த்தனை கட்டணம்
சரி இவ்வளவு சிறப்புகளை கொண்டிருக்கும் MSMEs துறையை BRICS PAY எப்படி வளர்க்கும் என்பதை பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் 'பிரிக்ஸ் பே' என்றால் என்ன? என்பது பற்றியும்? எதற்காக அது பயன்படுத்தப்படுகிறது? என்பது குறித்தும் தெரிந்தக்கொள்வோம். நம்மூரில் 'கூகுள்-பே' இருப்பதை போன்று சர்வதேச பண பரிவர்த்தனைக்கு 'SWIFT' எனும் வழிமுறை பின்பற்றப்படுகிறது. இதை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும்தான் உருவாக்கின. எனவே பண பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?
உதாரணத்திற்கு இங்குள்ள ஒருவர் அமெரிக்காவுக்கு ரூ.10 லட்சம் அனுப்ப வேண்டும். இதற்கு SWIFT முறையில் 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
1. SWIFT Charges - ₹1500
2. Correspondent Bank Fees - ₹1000
3. Exchange Spread Loss - ₹3000 (0.5% forex margin)
மொத்தமாக ரூ.5000 - ரூ.6000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். பண பரிவர்த்தனைக்கு 1-3 நாட்கள் வரை ஆகும். இதுவே 'பிரிக்ஸ் பே' எனில் நொடிப்பொழுதில் பரிவர்த்தனை நடந்துவிடும். கட்டண தொகை மிக குறைவாகத்தான் இருக்கும்.
லாபம் எவ்வளவு?
2023ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா பிரிக்ஸ் நாடுகளுடன் ஏறத்தாழ $200 பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தை செய்திருக்கிறது. இதுவே 'பிரிக்ஸ் பே' பரிவர்த்தன முறையில் நடந்திருந்தால் கட்டண செலவுகளை 80% வரை குறைந்து, வருடத்திற்கு சுமார் $3-5 பில்லியன் அளவுக்கு நம்மால் லாபத்தை ஈட்டியிருக்க முடியும். மட்டுமல்லாது பிரிக்ஸ் நாடுகளுடன் 5-10% வர்த்தக வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
மணப்பாறை முறுக்கும், பிரிக்ஸும்
சரி இப்போது MSMEs துறைக்கு வருவோம். இதன் பெயரே சிறு, குறு தொழில்கள்தான் என்பதால் இதை நடத்தும் நிறுவனங்களால் அதிகமாக முதலீடு செய்ய முடியாது. உதாரணத்திற்கு மணப்பாறை முறுக்கு உற்பத்தி செய்யும் சிறிய நிறுவனங்கள், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் எனில் பண பரிவர்த்தனைக்கு SWIFT முறையைதான் பயன்படுத்த வேண்டும். இதில் கட்டணம் அதிகமாச்சே. எனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த முறுக்கை உற்பத்தி செய்யும் MSMEs நிறுவனங்கள் தயங்கும்.
இந்தியா என்ன நிலைப்பாடு?
இதுவே 'பிரிக்ஸ் பே' இருந்தால் கட்டணம் மிக மிக குறைவாக இருக்கும். எனவே ஏற்றுமதியும் அதிகரிக்கும். இது தொடர்ந்து நடந்தால் இந்த துறையின் வளர்ச்சி குறுகிய காலத்திற்குள் 5-10%-ஐ எட்டும். வளர்ச்சி இருந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரமும் உயரும்.
ஆனால் இதையெல்லாம் செய்ய வேண்டும் எனில், இந்தியா 'பிரிகஸ் பே' உருவாக ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்காவுக்கு பயந்து பின்வாங்கிவிடக் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!












Click it and Unblock the Notifications