தீவிரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி
ரியோடிஜெனிரோ: தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பேசியுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
மனித இனம் ஒன்றுபட்டு தீவிரவாதத்தை தனிமைப் படுத்த வேண்டும். மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல், பிராந்திய பிரச்னைகள் தலை தூக்கியிருப்பதால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் 70 லட்சம் இந்தியர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஈராக்கில் நிலவிரும் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பிரிக்ஸ் நாடுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கிடையேயான முரண்பாடுகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவு தரும்.
பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்து வரும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.