BRICS: பாகிஸ்தான்தான் ஆடு.. ஆட்டத்தை கலைக்கும் அமெரிக்கா! இந்தியா உஷாராக வேண்டிய நேரமிது
வாஷிங்டன்: பாகிஸ்தான் நாட்டுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், இனி இந்தியா பாகிஸ்தானிடம் எண்ணெய் வாங்கும் நிலை வரலாம் என்று கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சவாலாக பிரிக்ஸ் நாடுகள் வளர்ந்து வரும் நிலையில், அதை கலைக்கும் முயற்சியில் டிரம்ப் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இந்த மிஷனில் பாகிஸ்தான்தான் பலி ஆடு.
இந்தியா தொடக்கத்தில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் ஈரானிடம் சண்டைக்கு போன அமெரிக்கா, அந்நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். எனவே அதை நாம் கைவிட்டுவிட்டோம்.

இப்போது ரஷ்யாதான் நமக்கு சப்ளையர். இந்திய ரூபாயில் ரஷ்யா கச்சா எண்ணெய்யை கொடுக்கிறது. ரஷ்யாவுக்கும்-இந்தியாவுக்கும் இடையேயான நட்பு நீண்ட பாரம்பரியம் கொண்டது. ஆனால் ரஷ்யாவுடன் சொந்த கரன்சியில் எண்ணெய் வர்த்தகம் இதனால் மட்டும் சாத்தியமாகவில்லை. இதற்கு காரணம் பிரிக்ஸ் நாடுகள்தான்.
காலாவதியாகிவிட்ட போர்கள்
குரங்கிலிருந்து உருவான மனிதன், நாடோடி வாழ்க்கையிலிருந்து ஓரிடத்தில் நிரந்தரமாக குடியேறி வாழ தொடங்கினான். அப்போது சொத்தும் உருவாக தொடங்கியது. இது எல்லை பிரச்சனையை உருவாக்க ஒருவரை ஒருவர் தாக்கி எல்லையை பாதுகாத்தனர். சற்று பலமானவர்கள் மற்றவர்களின் பகுதியையும் கைப்பற்றினர். இது நவீன போராக உருவானது. ஆனால் இன்றைய காலத்தில் போர்கள் வேலைக்கு ஆகாத விஷயம். பாலஸ்தீனம் மீது போர் தொடுத்து இஸ்ரேல் என்னத்தை கண்டது?
பொருளாதார ஆயுதம்
இன்றைக்கு இல்லை என்றாலும் பின்னாட்களில் பாலஸ்தீனம் மீண்டும் வலுவாக உருவாகித்தான் தீரும். ரஷ்யா-உக்ரைன் பஞ்சாயத்தும் இதே கதைதான். உக்ரைனை கைப்பற்றினால் எல்லாம் முடிந்ததா? அந்நாட்டு மக்கள் ரஷ்யாவுக்கு எதிராக திரண்டால் என்ன ஆகும்? எனவே போர்கள் கதைக்கு ஆகாத விஷயம். இதை அமெரிக்கா நன்கு உணர்ந்திருக்கிறது. ஆகவே ஆதிக்கம் செலுத்த ஆயுதங்களை தவிர்த்து பொருளாதாரத்தை கையில் எடுத்திருக்கிறது. அமெரிக்கா வைத்திருக்கும் வலுவான பொருளாதார ஆயுதம் 'டாலர்'தான்.
டாலர் எனும் ஆயுதம்
இதை எதிர்க்க நம்மை மாதிரியான சாதாரண நாடுகளுக்கு மற்றொரு ஆயுதம் வேண்டும். அதுதான் ஒற்றுமை. பிரிக்ஸ் அமைப்பு அப்படித்தான் உருவானது. இது ராணுவ கூட்டமைப்பு கிடையாது. BRICS ஒரு பொருளாதார கூட்டமைப்பு. சொந்த கரன்சியில் வர்த்தகம் என்பதை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இது அமெரிக்காவை கடுமையாக பாதித்திருக்கிறது. நேத்து வரை டாலரை பயன்படுத்திய மூன்றாம் தர நாடுகள் திடீரென சொந்த கரன்சியை பயன்படுத்துவதை, டாலரை தவிர்ப்பதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இது அந்நாட்டு அதிபரின் தலையில் மிகப்பெரிய பாரத்தை ஏற்றியிருக்கிறது. டாலரை காப்பாற்றி, அமெரிக்காவின் மானத்தை கப்பல் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவை வளைக்க முயற்சி
இதற்காக இந்தியாவுடன் உறவு கொண்டாடி பார்த்தது அமெரிக்கா. 2020ம் ஆண்டு இந்தியா வந்த டிரம்ப்புக்கு 'ஹவுடி டிரம்ப்' என்று கலக்கலான விழா கூட மோடி எடுத்திருந்தார். அமெரிக்கா போன மோடிக்கு 'ஹவுடி மோடி' என விழாக எடுக்கப்பட்டது. தன்னுடைய சிறந்த நண்பன் மோடிதான் என்று மேடைக்கு மேடை முழங்கினார் டிரம்ப். குட்டிக்கரணம் அடிக்காத கதைதான். ஆனால் இந்தியா பொருளாதார விஷயத்தில் பிரிக்ஸுடன்தான் கூட்டு சேர்ந்து பயணிக்க தொடங்கியது.
பிரிக்ஸ் vs அமெரிக்கா
சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா, ஈரான் இப்படி 10 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்திருக்கின்றன. எண்ணெய் வேணுமா? ரஷ்யாவிடம் இருக்கிறது. கனிம வளங்கள் வேணுமா? இந்தோனேஷியா இருக்கு. இப்படி எல்லா தேவைகளையும் பிரிக்ஸ் பூர்த்தி செய்வதால் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய இந்தியா ஆர்வம் காட்டவில்லை.
பாலி ஆடு பாகிஸ்தான்
இந்த ஆட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று டிரம்ப் முயன்றார். இந்தியா அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே பாகிஸ்தானை கையில் போட்டுக்கொண்டு கேம் ஆட முன் வந்திருக்கிறார். இதன் வெளிப்பாடுதான் பாகிஸ்தானில் இருக்கும் எண்ணெய் வளத்தை அமெரிக்கா வெளியே கொண்டு வரும் என்று டிரம்ப் கூறியிருப்பது. இதை சீனாவே செய்ய முன் வந்தது. ஆனால் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் போய் மாட்டிக்கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானை வைத்து பிரிக்ஸ் நாடுகளை சீண்ட அமெரிக்கா தொடர்ந்து முயலும். இந்த விளையாட்டில் இந்தியா உஷாராக இருக்க வேண்டியது முக்கியம்.












Click it and Unblock the Notifications