பஹாமாஸில் 13 வயது சிறுவன் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற கொள்ளையர்கள்
பஹாமாஸ்: பஹாமாஸில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 13 வயது சிறுவன் கண் முன்பே அவரது தந்தையை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எட்கர் டார்ட்(56). கனடாவில் வசித்து வரும் அவர் பஹாமாஸில் வசிக்கும் தனது 79 வயது தாய் ஜாயை பார்க்க குடும்பத்துடன் வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஜாயின் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டனர். ஆனால் எட்கர் மட்டும் அவர்களை எதிர்த்து போராடினார். உடனே அவர்கள் எட்கரை சுட்டனர்.
இந்த கொடூர சம்பவம் கட்டப்பட்ட அவரது 13 வயது மகன் ஜார்ஜ் மற்றும் 5 உறவினர்களின் கண் முன்பே நடந்தது. எட்கர் உதவிக்கு ஆளில்லாமல் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
எட்கரை சுட்ட கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடிவிட்டனர். அதன் பிறகு கட்டி வைக்கப்பட்ட உறவினர்களில் ஒருவர் கட்டை அவிழ்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பஹாமாஸ் தீவில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications