பாரீஸ் தாக்குதல் வழக்கு குற்றவாளியின் கைதும், பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களும்: பரபர ரிப்போர்ட்
பிரஸ்ஸல்ஸ்: பாரீஸ் தாக்குதல் வழக்கில் பிரஸ்ஸல்ஸில் வைத்து தீவிரவாதி சாலா அப்துஸ்ஸலாம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தான் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சாலா அப்துஸ்ஸலாம் கடந்த 18ம் தேதி பிரஸ்ஸல்ஸில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததற்காக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்பட்டது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
ஸலாமை பிரான்ஸுக்கு நாடு கடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அப்துஸ்ஸலாம் பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் 2 குண்டுகளும், மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு குண்டும் வெடித்தது. இதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
அப்துஸ்ஸலாம் கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.